Friday, July 31, 2009

வவுனியா நலன்புரி நிலையங்களில் வாழும் யாழ் மாவட்ட மக்களை டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்கின்றார் !

வன்னி யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் 11960 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40000 பேருக்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்ட மக்களை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெறுப்பேற்கவுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வந்து பொறுபேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்ததற்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம் மக்களை அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.

நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக வசித்து வரும் மக்களது நலன்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் தேவானந்தா தொடர்ச்சியாகப் பேசி வருவதனையடுத்து அம் மக்களை சொந்த இருப்பிடங்களில் மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 1141 குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களுக்கு விரைவில் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.