www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Tuesday, November 3, 2009

அற்புதனே மீண்டும் வா!


அற்புதனே மீண்டும் வா!

ஜனநாயகம் கூறும் நாட்டில்
மனிதத்தை நேசித்த
மானுடனுக்கா
நடுத் தெருவில்
துப்பாக்கி வேட்டெனும்
மரண தண்டனை!

உண்மையை உரத்துக் கூற
படிமம் வகுத்துத் தந்த
சிற்பிக்கா
மரண தண்டனை!

அரைஞாண்கயிற்றால்
கடிவாளமிட்டு நடுவன்
ஊடகத்துறையை
நகர்த்தியதால்
கிடைத்த கிரீடமோ
அநாதைப் பிணமெனும்
மரண தண்டனை!

ஊடகவியலாளனுக்கும் அப்பால்
மரணித்தவன் மானிடனென்பதால்
கொலைஞனைக் கண்டிக்க
முள்ளந்தண்டை நிமிர்த்தாத
ஊடகங்களே
ஏன் மௌனித்தன உங்கள் பேனாக்கள்
எழுதுகோலுக்குமா
மரண தண்டனை!

புது இராச்சியம் படைத்த அற்புதனே
உன் பரிணாமத்திலுமா ஓட்டைகள்
எழுத்தாணிக்கு செங்குருதி மையிட்டு
சமூகத்துக்கு உருக்கொடுத்த
பிரமாவே
எதற்காக உனக்கு
மரண தண்டனை!

கிழித்ததும் சீறிக்கொள்ளும்
தீக்குச்சாய் செய்தி பகரும்
ஊடகங்களே
உங்கள் பக்கங்களையும்
மௌனிக்க வைத்தனவா
மரண தண்டனை!

அற்புதனே மீள் பிறப்பு
நிச்சயம் இருப்பின்
எழுத்தாளனாக
மீண்டும் வா
கொலைஞர்களை
கழுமரத்தில் ஏற்றி
வழங்கிடுவோம்
மரண தண்டனை!