www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, October 12, 2008

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!

தமிழக மண்ணுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் வணக்கம்!!

தமிழகம் ஈழத்தமிழர்களின் வேரடி மண்!
ஈழத்தமிழர்களாகிய நாம் செழித்து வளர எங்கள்
வேருக்கு நீர் வார்த்தது தமிழகம்!

இந்த நன்றியுணர்வோடு நான் உங்களுடன் மனம் திறந்து
சில வார்த்தைகள் பேச விரும்புகின்றேன்.
காலத்தின் கட்டளையை ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எங்கள் கொள்கை வழி நின்று எமது மக்கள் சார்பாக இலங்கை மத்திய அரசில் நான் அமைச்சராக பங்கெடுத்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஐனநாயகப்பிரதிநிதியாகவே நான் உங்களுடன் பேச விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரி நீங்கள் தமிழகமெங்கும் எழுச்சிப்போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி! இது குறித்து எமது மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு தமிழகமெங்கும் பல்வேறு கட்சிகளும் கூட்டாக இணைந்து போராட்டங்களை நடத்தும் போது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்காத வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்திருப்தையிட்டு ஒரு புறம் மகிழ்ச்சியும் மறு புறம் வேதனையும் பிறக்கின்றது.

உங்களுக்கு தெரியும்…. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நாமும் அன்று பல்வேறு அமைப்புகளாக சுதந்திரமாகவும் கூட்டாகவும் இணைந்து போராடியிருந்தவர்கள். அதற்கு ஆதரவு தேடி நாம் தமிழகம் வந்த போது எம்மை நேசக்கரம் நீட்டி எமக்கு களம் கொடுத்தீர்கள், பலம் கொடுத்தீர்கள்.
ஆனாலும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் இருக்க வேண்டும் என்ற எமது மக்களின் ஐனநாயக விருப்பங்களுக்கு மாறாக புலித்தலைமை சக விடுதலை அமைப்புகள் அனைத்தையும் அழிக்க முற்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான சக இயக்க போராளிகள் புலித்தலைமையால் கொல்லப்பட்டார்கள். இது போன்ற தனித்தலைமை வெறிபிடித்த ஐனநாயக மறுப்புகளுக்கு மத்தியில்தான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய ஈழத்தமிழ் தலைவர்கள் அனைவரும் புலித்தலைமையினால் கொன்றொழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் விட்டுச்சென்ற இடைவெளியில் நின்றுதான் நான் உங்களோடு பேசுகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு இருக்க வேண்டிய முதல் உரிமை பல கட்சி ஐனநாயக உரிமை! தமிழகத்தலைவர்கள் போல் பல கட்சி தலைவர்களும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முடிந்த ஐனநாயக சூழல் தமிழக மக்களுக்கு கிடைத்திருப்பது போல் தமக்கு மட்டும் கிடைத்திருக்கவில்லை என்பதே ஈழத்தமிழர்களுக்கு வேதனை தரும் விடயம்.

ஆனாலும், நாம் இன்னமும் மக்கள் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். மரணங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றோம். எமது மக்களின் கருத்துக்களை நாம் சரி வர அறிந்து அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நேரில் சந்தித்து அறிந்து வருகின்றோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருந்த பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவித்திருப்பார்கள். ஆனால் புலித்தலைமை அதை ஏற்றிருக்கவில்லை. மாறாக இந்திய அமைதிப்படையோடு யுத்தம் நடத்தினார்கள். அன்னை இந்திராவின் புதல்வாரன முன்னாள் இந்திய பிரதமர் ரஐPவ் காந்தியை கொன்றொழித்தார்கள். இதனால் ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள்க்கொடி உறவை அறுத்துப்போட்டார்கள். எமது நேச நடான இந்தியாவின் பகமையை வளர்த்துக்கொண்டார்கள்.

இந்த தீராத வடுக்களுக்கு மத்தியிலும் அறுந்து போன எமது தொப்புள்க்கொடி உறவை
தமிழக தலைவர்களாகிய நீங்கள் உங்கள் உணர்வுகளால் மறுபடியும் ஒட்ட வைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு புறமிருக்க, பிரேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கரமசிங்க - புலிகள் பேச்சு வார்த்தை, மகிந்த ராஐபக்ச - புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் விரும்பி காத்திருந்தார்கள். ஆனால் புலித்தலைமை அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அமைதிப்பேச்சுக்களை முறித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

அரசியல் தீர்விற்கான எந்த கோரிக்கைகளையும் புலித்தலைமை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கவில்லை. எமது மக்கள் ஏமாந்தார்கள். ஆனால் அதற்கு எதிராக ஏன் என்று புலித்தலைமையை பார்த்து கேள்வி கேட்பதற்கு எமது மக்களுக்கு சுதந்திரம் இல்லை.
இந்த சந்தர்ப்பங்களின் போது புலிகளை நோக்கி அரசியல் தீர்விற்கு உடன் படுங்கள் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் நான் இன்னும் பல மடங்கு மகிழ்ந்திருப்பேன். இன்று நீங்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

2006 செப்பரம்பர் 9 இல் புலிகள் யாழ் குடாநாடு நோக்கி பெரும் படையெடுப்பை நடத்தியிருந்தார்கள். அதில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்துவிட்டு திரும்பி விட்டார்கள். இதனால் யாழ் குடாநாட்டிற்கான பிரதான வினியோகப்பாதையான ஏ 9 வீதியை மூட வேண்டிய சூழலை புலித்தலைமையே உருவாக்கிக்கொண்டது. கடல் வழியாக உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் என்பன யாழ் குடாநாட்டு மக்களுக்காக அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது. அந்த உணவுக்கப்பல்கள் மீதும் புலித்தலைமை தாக்குதல்களை நடத்தினார்கள்.

இது எதற்றாக என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.. எமது மக்கள் பட்டினிச்சாவில் நலிய வேண்டும், அதை வைத்து மக்களுக்கு உணவில்லை என்று கூறி தங்களது அழிவு யுத்தத்திற்கு ஆட் திரட்டுவதுதான் புலித்தலைமையின் நோக்கம்.

புலித்தலைமையினர் அரசுடன் பேச்சு நடத்த யப்பான் போனார்கள், நோர்வோ போனார்கள், சுவிஸ் போனார்கள். அர்த்தமற்ற நிபந்தனைகளை விதித்து அமைதிப்பேச்சுக்களை தாமாகவே முறித்துக்கொண்டு திரும்பினார்கள்.

அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று பேச்சு வார்த்தை மேசையில் புலித்தலைமை இலங்கை அரசிடம் கோரியிருந்தால் இன்று எமது மக்கள் அழிவு யுத்தத்தை சந்தித்திருக்க வேண்டிய துயரம் நிகழ்ந்திருக்காது. அதன் பின்னர் கிழக்கு மகாணத்தில் மாவிலாறு அணைக்கட்டை புலித்தலைமை மூடியதால் பாரிய மோதல் வெடித்தது. கிழக்கு மாகாணத்தை முற்றாக இழந்து புலிகள் ஓடி விட்டார்கள்.

இன்று வடக்கு நோக்கிய படை நகர்வு நடந்து கொண்டிருக்கின்றது. புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு அஞ்சி எமது மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர முடியாமல் தவிக்கின்றார்கள். பொது மக்களை பாதுகாப்பான இடம் நோக்கி வருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் புலித்தலைமையோ வழமைபோல் மக்களை மனிதக்கேடயங்களாக தமது அழிவு யுத்தத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்கள். பாதுகாப்பான இடம் நோக்கி எமது மக்கள் நகர்வதை புலித்தலைமை தடுத்து வைத்திருக்கின்றது.

புலித்தலைமையின் பலாத்காரப்பிடிக்குள் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சொல்ல முடியாமல் தவிக்கும் எமது மக்களை, அதிலிருந்து மீட்பதற்காகவும் நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று உங்களிடம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.


புலித்தலைமையினர் அரசியல் தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டனர். அழிவு யுத்தத்தை நடத்தி அதில் எமது மக்கள் கொல்லப்பட வேண்டும் என்பதையே புலித்தலைமை விரும்புகின்றது. அதை வைத்து ஒப்பாரி வைப்பதும் ஆதரவு தேடுவதும்தான் அவர்களது நோக்கம். புலித்தலைமையின் இந்த விசித்திரமானதும் வேதனையானதுமான சுயலாப அரசியலை எமது மக்கள் வெகுவாகவே புரிந்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்கள் இந்த அழிவு யுத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் ஜனநாயகவழியையே விரும்புகிறார்கள். அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் விரும்புகின்றார்கள். ஆனால் புலித்தலைமையோ அழிவு யுத்தத்தை விரும்புகிறது.

ஆகவே ஈழத்தமிழர்களின் பிரச்சினை வேறு! புலித்தலைமையின் பிரச்சினை வேறு என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அழிவு யுத்தத்தில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பதற்காக நீங்கள் தமிழகத்தில் நடத்தும் போராட்டங்களை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கு பலம் சேர்பதற்காக அமைந்து விடக்கூடாது என்பதுதான் எமதும் எமது மக்களினதும் விருப்பங்களாகும்.

இந்த அழிவு யுத்தத்திற்கு பிரதான காரணமாக இருப்பவர்கள் புலித்தலைமைதான் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். புலித்தலைமை ஐனநாயக வழிக்கு வருவார்கள் என்;றோ, அழிவு யுத்தத்தை கைவிட்டு அரசியல் தீர்வை ஏற்பார்கள் என்றோ இங்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை.

யுத்தத்தை நிறுத்துமாறு நீங்கள் கோரிக்கை எழுப்புவது தவறானது அல்ல. ஆனாலும் புலித்தலைமை தாம் பலவீனமடையும் போது யுத்த நிறுத்தம் செய்வதும், பின் தங்களை பலப்படுத்திக்கொண்டு மறுபடியும் அழிவு யுத்தத்தை தொடங்குவதும்தான் இதுவரை கால வரலாறு.

தம்மிடம் இருந்த பலத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்காக புலித்தலைமை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. பலம் வந்தால் யுத்தம், பலவீனமானால் பேச்சு வார்த்தை என்று தொடர் துயரங்களுக்குள் எமது மக்களை புலித்தலமை சிறை வைத்து வருகின்றது. விவேகம் இல்லாத வெற்று வீரத்தால் எமது மக்கள் அவலப்படுகின்றார்கள்.

புண்ணுக்கு வலியா?,… மருந்துக்கு வலியா?.... புண்ணுக்குத்தான் வலி! எமது மக்களின் வலியை உணர்ந்து எமது தமிழர் தரப்பினர்தான் உரிமைகளை பெற முயன்றாக வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்திலானான 13 வது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அது போலவே வடக்கு மாகாணத்திலும் தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும் வரைக்கும்
வடக்கு மக்களுக்கான இடைக்கால ஏற்பாடாக ஒரு சிறப்பு நிர்வாகத்தை அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.
பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும்.
கிடைப்பதை எடுத்துக்கொண்டு இன்னும் எடுக்க வேண்டியதற்காக நாம் ஜனநாயக வழியில்
போராட வேண்டும்.

தமிழக மக்களின் எழுச்சியும், இந்திய அரசின் பக்கபலமும் இருந்தால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இலங்கைத்தீவில் அரசாங்கம் முன்னெடுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க முடியும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அரசியல் தீர்வாக உருவாக்கப்பட்ட
மாகாணசபை முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து
இறுதித்தீர்வை நோக்கி செல்வதற்கு நீங்கள் உதவ வேண்டும். இதற்கு தடையாக
இருந்து வரும் புலித்தலைமக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்
என்பது எமது நியாயமான எதிர்பார்ப்பாகும்.


இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்தினால் ஈழத்தமிழர்களை அழிவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். அப்போது எமது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
எமது மக்கள் முன்னரை விடவும் முழுமையாகவே அரசியல் தீர்வின் பக்கம் அணி திரண்டு வருவார்கள்.

அரசியல் தீர்வு பலப்படும் போது புலித்தலைமையும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தில்
அரசியல் தீர்வு நோக்கி வருவார்கள். யுத்தம் நிறுத்தப்படும். எமது மக்கள் அச்சம் தரும் வாழ்வையும் கடந்து அழிவுகளற்ற அமைதிப்ப+ங்காவில் ஆனந்தக்களிப்போடு வாழும் சூழல் பிறக்கும். இதுவே எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சி!

எம் இனிய உடன் பிறப்புகளே!...

உங்களது எழுச்சிப்போராட்டங்கள் தொடர்வதாயின் தொடரட்டும்.. ஆனாலும் அவைகள் புலித்தலைமையின் யுத்த வெறிக்கு துணை போய்விடக்கூடாது. நடை முறைச்சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை முன்நகர்த்தி செல்வதற்கு உங்கள் போராட்டம் பங்களிப்பதே சிறப்பானதாகும்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண போராளிகள் தமது தலைமையின் தவறுகளை உணர்ந்து திருந்தி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டார்கள். வடக்கிலும் புலித்தலைமையில் இருந்து பலர் வெளியேறுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களின் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களும், இலங்கை தமிழ் இடது சாரி தலைவர்களான தோழர்கள் அண்ணாமலை, மற்றும் விஜயானந்தன் போன்றவர்கள் எம் மத்தியில் இல்லை. அன்று ஆயுதப்போராட்டம் நடத்திய சக இயக்கத்தலைவர்களும் இன்று உயிருடன் இல்லை. அனைவருமே புலித்தலைமையால் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள்.

அவர்களின் கொள்கை வழி சார்பாகவும், எமது மக்களின் விருப்பங்கள் சார்பாகவும்
இந்த மனிதாபிமான வேண்டுகோளை நான் உங்களிடம் விடுக்கின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கும் தமிழக உறவுகளுக்குமான
தொப்புள்க்கொடி உறவு தொடரட்டும்.!
இலங்கை இந்திய நட்புறவு வளரட்டும்.!!
ஈழத்தமிழர்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக மட்டும் குரல் கொடுங்கள்!

பிரியமுடன்

அவலப்படுகின்ற ஈழத்தமிழர்கள் சார்பாக
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)

Thursday, October 9, 2008

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களின் பாராளுமன்றத்திற்கான வருகை ஐனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கான ஒர் அரிய சந்தர்ப்பமாகும்.! எனவே அவரது வருகையை நான் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன்.

பாராளுமன்றம் சந்தர்ப்பவாதிகளின் இடமல்ல! அது சந்தர்ப்பவாதிகளுக்கு இடம் கொடுக்கும் களமாகிவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் அகிம்சையில் தொடங்கிய போது பாராளுமன்றமும் அதற்கு ஒரு களமாக திகழ்ந்திருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியானது பாராளுமன்றத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது எனக் கருதி அந்தப் பாதையை முழுமையாக நிராகரித்திருந்தது.

முடிவற்று தொடரும் அழிவு யுத்தமும், தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் சகோதரப் படுகொலைகளும், இவைகளால் விளையும் அவலங்களும், எமது ஆயுதப்போராட்டம் பெற்றுத்தந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் பேசும் மக்களை மறுபடியும் பாராளுமன்றத்தை நோக்கியே அழைத்து வந்திருக்கின்றது.

எமது மக்களுக்கான ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில், எமது மக்களின் வாக்குப்போடும் சுதந்திரம் கூட பலாத்காரமாக பறிக்கப்பட்ட ஒரு சூழலில், தவறான முறையில் பாராளுமன்றம் வந்தவர்கள் பலரும் தங்களது பாராளுமன்ற பதவிகளை வெறும் சுயலாப அரசியலுக்காகவே
இன்று வரை பயன்படுத்தி வருகி;றார்கள்.

வெறும் பரபரப்பு காட்டுவதற்காகவும், பத்திரிகைச் செய்திகளுக்காகவும் பாராளுமன்றத்தில் வீராவேசமாக பேசுவதோடு மட்டும் அவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

ஆனாலும் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்காக, நிரந்தர அமைதிக்காக, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக தங்களது பாராளுமன்ற பதவிகளை அவர்கள் இதுவரை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்!

இந்நிலையில் பராளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் வெற்றிடமாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்கான சந்தர்ப்பம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஐனநாயக வழிக்கு வந்தவர்களில் நானும் ஒருவனாக பாரளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் புலித்தலைமையின் தவறுகளை புரிந்து கொண்டு அதை விட்டு விலகி பாராளுமன்றத்திற்கு முதன் முதலாக அந்த அமைப்பில் இருந்து வந்திருப்பவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா என்பதால் இது வரலாற்றின் முக்கியப் பதிவாகவே
கருதப்படுகின்றது.


அழிவு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் புலித்தலைமையின் தவறுகளைப் புரிந்து கருனாவும், அவரது போராளிகளும் பிரிந்து வந்த போது முதன் முதலாக, வெளிப்படையாகவே அவர்களது வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று எண்ணி அவர்களை நாம் வரவேற்றிருந்தோம்.

அதன் பின்னர் தனது பாதையை அவராகவே அவர் வகுத்திருந்த போது எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியவர்களும் நாங்கள் தான். இன்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை மறுபடியும் நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்றிருக்கின்றோம். கருணா விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் வழியைப் பின்பற்றி முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்தில் இருந்து ஏனையவர்களும் விடுபட்டு வரவேண்டும் என நாம் விரும்பி வரவேற்கின்றோம்.

கருத்தியல் ரீதியாக வேறு பட்டு நின்றாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்போம்!

அரசியலுரிமை சுதந்திரத்தை வென்றெடுக்க ஒன்றிணைந்து உழைப்போம். தொடரப்போகும் மக்கள் சேவைக்கு எமது ஆதரவு என்றும் உண்டு!

எதிர்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக
பாராளுமன்றம் வருவதற்கு எமது வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகும்!.

பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்களினால் பொன்னான செயல்கள் யாவும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. வடிகின்ற எம் மக்களின் கண்ணீரைத் துடைக்க, சொரிகின்ற எம் மக்களின் குருதியை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் சேர்ந்துழைப்போம்.


டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்

Wednesday, October 1, 2008

சர்வதேச வயோதிபர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தி


01.10.2008 - புதன்கிழமை


முதியோர்கள் எம் கண்முன்னால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோர்கள், இதுவரை வாழ்ந்து முடித்துவிட்ட சாதனையோடும், இன்னமும் வாழ்வோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடும் இந்த ஆண்டிலும் வருகின்ற வயோதிபர் தினத்தை முதியோர்களான நீங்கள் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

வாழ்வின் அனுபவங்களில் முதிர்ச்சி அடைந்தவர்கள் நீங்கள் என்பதால் வயோதிபர்களை முதியோர்கள் என்று அழைப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

நீங்கள் பெற்றிருக்கும் முதுமைக்கு மரியாதை செலுத்தும் தினமே வயோதிபர் தினமாகும். முதியோர்களாகிய உங்களுக்கு செலுத்துகின்ற மரியாதை என்பது நாம் வாழும் தேசத்திற்கும் மானுட சமூகத்திற்கும் செலுத்துகின்ற மரியாதை என்றே நான் கருதுகின்றேன்.

அனுபவங்கள்தான் சிறந்த படிப்பினைகள். இந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்த அனுபவங்களாகவே கருதப்படுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எமது இளம் சந்ததியினர் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள். உங்களில் பலர் பாடப் புத்தகங்களாக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களாகவும் இருக்கின்றீர்கள்.

நீங்கள் நடந்து வந்த பாதையில் கற்களையும் முட்களையும் சந்தித்திருப்பீர்கள். இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு போட்டு அனுபவித்திருப்பீர்கள். உங்களது இல்லற வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி பல இலட்சியங்களை நீங்கள் எட்டியிருப்பீர்கள். அந்த இலட்சியங்களை எட்டுவதற்கு பல்வேறு தடைகளையும் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவங்கள்தான் எமது சமகால இளையோர்களுக்கு அவசியமானவைகளாகும்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை உங்களுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோர்கள் கற்க வேண்டும். எது சரி?... எது பிழை?... எது நீதி?... எது அநீதி?... இவைகளை முதியவர்களான நீங்கள் உங்கள் அனுபவங்களால் கற்றுணர்ந்தவர்கள்.

நீங்கள் பெற்ற அனுபவங்களை எமது இளையோர்களுக்கும் நீங்கள் கற்றுக்கொடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை! மனித உயிர்கள் மீதான நேசத்தையும் தேவையற்ற வன்முறைகள் மீதான எதிர்ப்பையும் கற்றுணர்ந்த நீங்கள் எமது சமகால சந்ததியினருக்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பதே இந்த தேசத்திற்றும் மனித சமூகத்திற்கும் ஆற்றுகின்ற பணியாகும்.

இன்றைய இளையோர்கள் நாளைய முதியோர்கள் என்பதை உணர்ந்து முதியோர்களாகிய உங்களை இன்றைய இளையோர்களும் கனம் பண்ண வேண்டியது அவர்களது கட்டாய கடமையாகும்.

காவோலை விழும்போது குருத்தோலை சிரிப்பது போல் அன்றி முதியோர்களுக்கான மரியாதை என்பதை இளைய சமுதாயத்தினர் செலுத்தியே ஆக வேண்டும்.

மனிதர்கள் யாவரும் சமன் என்ற நிலை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். மனிதர்களுக்கிடையிலான பல்வேறு முரண்பாடுகளும் அகற்றப்பட வேண்டும். இன, மத, சமூக, பிரதேச முரண்பாடுகள் மட்டுமன்றி தலைமுறை இடைவெளியால் உருவாக்கப்படும் இளையோர் முதியோர்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் இருக்குமேயானால் அவைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும்.

ஒரு மனிதனின் மரணம் என்பது இயற்கையானதாக இருப்பதையே எந்தவொரு நாகரீக சமூகமும் விரும்புகின்றது. இத்தகைய ஒரு சூழல் எமது வாழ்விடங்களிலும் விரைவாக உருவாக்கப்படல் வேண்டும்.

எமது தேசத்தில் அமைதியும் சமாதானமும் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். சகல இன, மத, சமூக மக்களும் சமாதான சக வாழ்வை நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.

வயோதிபர்களான நீங்களும் இன்றைய அமைதியற்ற சூழலினால் பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மாற்றமொன்று நிகழும் என்பதில் மாற்றமில்லை என்பது எனது நம்பிக்கையாகும்.

இவ்வாறானதொரு மாற்றம் என்பது அமைதியின் வருகைக்கான மாற்றமாக இருக்க வேண்டும். உங்களது வழித்தோன்றல்கள், உங்களது அடுத்த சந்ததியினர் எமது வாழ்விடங்கள் தோறும் நிம்மதியாக வாழும் காலத்தை உங்கள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும். அதற்கு ஜனநாயகம் புத்துயிர் பெற்று எழ வேண்டும். ஜனநாயக சுதந்திரத்தை பலப்படுத்த வேண்டும்.

அதற்காக நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் பங்களிப்பையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பர்க்கின்றேன். இதுவே வயோதிபர் தினத்தில் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!
நீண்ட ஆயுளோடும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் நீங்கள் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் சேவையில் உள்ள,

டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம், ஈ.பி.டி.பி.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்

Saturday, September 6, 2008

ஈபிடிபி பத்திரிகைச் செய்தி

Saturday, August 9, 2008

தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் உரை

Saturday, March 8, 2008

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் - ஈபிடிபி. மட்டு. மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.புரட்சிமணி

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.புரட்சிமணி எனும் அ.இராசமாணிக்கம் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி.


பேட்டி கண்டவர் :- பி.வீரசிங்கம்
கேள்வி :- மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கூறுங்கள் ?

பதில் :- கடந்த 16 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டு வருகிறோம். கட்சியன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றிவருகின்றார். திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவரைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கியிருந்தமை அவரிடம் பிரதேச வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதற்கு சிறந்த சான்றாகும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார் அமைச்சர் டக்ளஸ். பிரதேசம், இனம் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் சகலரையும் சமமாக பார்க்கும் அதேவேளை, சிறந்த ஜனநாயகத் தலைமைத்துவத்தையும் எமக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

கேள்வி :- மட்டக்களப்பு உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் உங்கள் கட்சியின் பங்களிப்பு எப்படி?

பதில் :- மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்த வரையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் எமது கட்சியும் ஒன்றிணைந்து சுயேற்சைக் குழுவாக அப்பிள் பழ சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
மக்கள் மத்தியில் இருந்து அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் தொடக்கம் சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து முடிந்த வரை அவர்களுக்கு உதவுவதுடன், மக்களின் சிறந்த சேவகர்களாகவும் தொடர்ந்து செயற்படுவார்கள்.

கேள்வி :- ஜனநாயக ரீதியில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருக்கின்றனரா?

பதில் :- நீண்ட காலத்தின் பின்னர் இத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில்தான் தேர்தல்கள் நடந்தன. அத்தேர்தல்களில் மக்களின் பெயரால் வாக்குகள் அளிக்கப்பட்டனவே தவிர, மக்கள் முழுமையாக பங்குபெறவில்லை. இந்தத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். வாக்களிக்கத் தயங்குவதோ அல்லது தேர்தலை நிராகரிப்பதோ கடந்த காலங்களைப் போல ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மீண்டும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையைத் தோற்றுவிக்கக்கூடும்.
ஆயுத அச்சுறுத்தலற்ற சூழலை ஏற்படுத்தவும், மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், தமது பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைகளுக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான ஒரு சூழலை உருவாக்கும் விதத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டும்.

கேள்வி :- மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல் கள நிலவரங்கள் சுதந்திரமானதும், நீதியாதுமான தேர்தலை நடத்தக் கூடியதாக இல்லையென ஐ.தே.க மற்றும் சில அமைப்புக்கள் உள்ளனவே !

பதில் :- இதற்கு முன்னர் பல தேர்தல்கள் நடைபெற்றன. அப்போதும் யுத்தச் சூழல் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடும்போது அந்தளவிற்கு மோசமான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் தொடக்கம் இன்று வரையுள்ள நிலைமைகளைப் பார்த்தால் ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றே கூறலாம்.
இப்போதைய சூழ்நிலைகளை சில கட்சிகள் தமக்கேற்ற விதத்தில் வெவ்வேறு வகையான அர்த்தங்களால் பேசுகின்றன. மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களே இவ்வாறான கைங்கரியங்களைச் செய்கின்றனர். மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த அக்கட்சிகள் தான் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
காலத்திற்குக் காலம் பல கட்சிகள் உருவாகுவதும், பின்னர் அவை இல்லாமல் போவதும் இயல்பான விடயங்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்று அரசியலில் தமக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு தேர்தலில் நின்று வெற்றியீட்டிய கட்சிகளை விரல்விட்டு எண்ணிப் பார்த்துவிடலாம். எடுத்தவுடன் தேர்தலுக்கு முகங்கொடுத்துவிட்டு தோல்வி கண்டதும் காணாமல் போகும் கட்சியினர் அல்ல நாம். பல தேர்தல்களில் முகம் கொடுத்திருக்கின்றோம். மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றோம். எந்தக் கால கட்டத்திலும் ஆயுத முனையில் அதிகாரத்தைப் பெற முனைந்தவர்களல்ல நாம்.
பிரதேச வேறுபாடுகளைக் கூறி குளிர் காய்ந்த காலங்கள் மாறிப் போய்விட்டன. மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றித்தான் பேசுகின்றனர். எதிர்காலச் சமுதாயம் சீரழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக இந்தத் தேர்தலை நாம் ஏற்று சகோதரக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.

கேள்வி :- உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில் :- உள்ளுராட்சி தேர்தல் எதிர்பார்ப்பது போல் ஜனநாயக முறையில் நடைபெறும் பட்சத்தில், அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக அறிகிறோம். முடிவுகள் இந்தத் தேர்தலில்தான் தங்கியிருக்கிறது.
மாகாண சபைகளுக்கூடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கிப் போகமுடியுமென கட்சி நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றது. மாகாண சபைகளுக்கூடாக மூன்று கட்டங்களாக இறுதித் தீர்வையடையலாம் என கட்சியின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதே எமது நிலைப்பாடாக இருப்பினும், சமகால அரசியல் சூழ்நிலைகள், பிரச்சினைகள், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வடக்கு கிழக்கு வெவ்வேறான நிர்வாகங்கள் என பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துமானால் அதிலும் நாம் போட்டியிடுவோம். தோழமைக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருவதுடன், எதிர்கால சமூகத்தின் நலன்களைக் கருத்திற் கொண்டு எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி :- எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கூறமுடியுமா?

பதில் :- கிழக்கு மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பது நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலின் பின்னர் தெரியவரும். தேர்தல் நீதியானதாகவும், ஜனநாயக ரீதியிலும் நடைபெற வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. நாம் ஒருபோதும் பலாத்காரத்தில் ஈடுபட்டதில்லை. ஜனநாயக வழிக்குத் திரும்பிய தோழமைக் கட்சிகளுடன் இணைந்து சுயேற்சைக் குழுவாக போட்டியிடுகின்றோம். மக்கள் மத்தியில் எமக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் ஜனநாயக மரபுகளை உரிய முறையில் பேணி, தேர்தல் சிறந்த முறையில் நடக்க பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவரும் யுத்தம் மற்றும் சுனாமிப் பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் இன்னும் சிலருக்கு உரிய முறையில் போய்ச் சேரவில்லை. அதனைப் பெற்றுக் கொடுப்பதுடன், மரணித்தவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது போன்ற உடனடி உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.
அத்துடன் உள்ளுராட்சி சபைகளினூடாக மேற்கொள்ளவேண்டிய கிராம அபிவிருத்தித் திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்துவதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, பொதுச் சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

நன்றி – தினகரன் வாரமஞ்சரி

Sunday, March 2, 2008

அராஜகம் மலிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மண்ணை இரு கூறாக்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தலை நடாத்துவதற்கு முயற்சி எடுத்து வருகின்றது, இதன் ஓர் அங்கமாக முதற்கட்டமாக மட்டுநகரின் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தலை மார்ச் 10 ஆம் திகதி ஏககாலத்தில் நடாத்தி நாடி பிடித்துப் பார்க்க அரசாங்கம் முயன்று வருவது கண்கூடு.

இந்த தேர்தல் களத்தில் ஆயுதம் தரித்த கட்சிகளும் வாக்குச் சேகரிப்பில் மும்முரம் காட்டி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது, ஜனநாயகத் தேர்தலொன்றில் ஆயுத முனையில் வாக்குச் சேகரிப்பதென்பது நகைப்புக்குரிய விடையமாக கருதப்படுகின்றது.

சுதந்திரமான நீதியான தேர்தலொன்று நடைபெறக்கூடிய ஜதார்த்த சூழ்நிலை இப்பகுதியில் இல்லாததனால் அநீதியான முறையில் தெரிவுகள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதே கள நிலவரமாகும்.

ஆயுததாரிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளதால் வாக்குகள் வாக்காளர்களின்றியே பதிவு செய்யப்படக்கூடிய அபாயம் ஏற்படுமென அஞ்சப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக (TMVP) மாறிய கருணா, பிள்ளையான் அணியினர் தங்கள் பாதுகாப்புக்கென துப்பாக்கிகளை தம்வசமே வைத்திருப்பது நாடறிந்த விடயம். இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்தும் மற்றைய உள்ளூராட்சி சபைகளில் தனித்தும் போட்டியிடுகின்றனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -நாபா (EPRLF), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஆகிய மூன்று அமைப்பினரும் இணைந்து சுயேச்சைக் குழுவாக அப்பிள் சின்னத்தில் போட்டி போடுகின்றனர்.
ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்)எனக் கூறிக் கொள்ளும் ஈழவர் ஜனநாயக முன்னணியும் இன்னும் பல சுயேச்சைக் குழுக்களும் மற்றும் முஸ்லிம் குழுக்களும் போட்டி போட அபேட்சகர்களை நிறுத்தியுள்ளனர்.

இத்தேர்தலில் சுயேச்சைக் குழுக்களாக 61 வேட்பு மனுக்களும் கட்சிகளின் சார்பில் 38 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றில் 8 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் ஒரு அரசியல் கட்சியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு 52 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலுக்கு தயாராகி உள்ளன.
நடைபெறவிருக்கும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமாவென இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 12, 2008

வீரகேசரி வாரவெளியீட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செவ்வி


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய செவ்வி –13.01.2008

செவ்வி கண்டவர் திரு. சுமணன்

கேள்வி: இடைக்கால நிர்வாகசபை பற்றிப் பேசுகிறீர்கள், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிக் கூறுங்கள்?

பதில்: இதில் இடைக்காலத் தீர்வு, இடைக்கால நிர்வாக சபை என இரண்டு விடயங்கள் உள்ளன. நாங்கள் இன்று கேட்பது இடைக்காலத் தீர்வு சம்பந்தமானது. மக்களுடைய அரசியல் உரிமைக்காக அன்று நாம் ஆயுதம் ஏந்தி போராடியிருந்தோம். ஜனநாயக வழிமுறை மூலம் தீர்க்க முடியாது என்ற காலத்தின் கட்டளையை ஏற்றுத்தான் அன்றைய சூழலில் அவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம். ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் சமாதானச் சகவாழ்வு காணலாம் என்ற சாதகமான ஒரு சூழலை உணர்ந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டிருந்தோம். 20 வருடமாகியும் அதனை தீர்க்க முடியவில்லை. இதற்குப் பிரதான தடையாக பிரபாகரனே உள்ளார். இருந்தாலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் யாவும் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்ற கேள்வியும் உள்ளது. இந்த நம்பிக்கை போதுமானதாக இல்லை. அந்த வகையில் நாங்கள் ஜனாதிபதி பிரேமதாசா அவர்களிடமும், சந்திரிகா குமாரதுங்க அவர்களிடமும் பேசி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக மக்கள் பிரதிநிதித்துவத்துடன் அமுல்படுத்தும் படி கேட்டிருந்தோம்.

எங்களது அரசியலில் ஆளும் கட்சி தீர்வை முன்வைத்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்னர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மாறி நடப்பதும் தான் நடக்கிறது. அதனால் அரசியல் தீர்வுத் திட்டம் முன்னோக்கி நகர முடியாமல் இருக்கிறது.

ஆகவேதான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது எங்களது நிலைப்பாடு. சர்வகட்சி மாநாட்டின் மூலம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு இணக்கப்பாட்டிற்கு வருவது கஷ்டம். அப்படி வந்தாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த சட்டவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை சிலவற்றிற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். இலங்கையின் அரசியல் சூழலில் இது இரண்டுமே சாத்தியமில்லை என்பதே கடந்த கால சம கால அனுபவங்களாகும். ஆகவேதான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடிந்த மாகாண சபையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்கிறோம்.

முதல் கட்டமாக, இங்கிருந்து தொடங்கினால் எமது இறுதித்தீர்வை நோக்கி சுலபமாக நகர முடியும் என்பது நடைமுறை யதார்த்தம் என்பதாலும்,

மக்களுடைய நாளாந்த அவலங்களை தீர்ப்பதற்கான மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஒரு அரசியல் தளமாக இது இருக்கும் என்பதாலும்,

தமிழ்த் தீவிரவாத்திற்கும், சிங்களத் தீவிரவாத்திற்கும் இடையில் அவதிப்படுகின்ற மக்களை அந்த சூலில் இருந்து மீட்டு, இன ஐக்கியத்துடனும், இன சமத்துவத்துடனும் வாழமுடிந்த ஒரு சமாதான தேசத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறை என்பதாலும்,

ஆட்கடத்தல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள், கப்பம் கோருதல், மற்றும் பேசுவதற்கும், எழுதுவதற்கும், சுதந்திரமாக நடமாடுவதற்கும், விரும்பிய அரசியல் கட்சியை ஆதரிப்பதற்கும்
அச்சுறுத்தலாக இருக்கின்ற மனித உரிமை மீறல்களில் இருந்தும், ஜனநாயக மறுப்பில் இருந்தும் மக்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான சட்ட ஒழுங்குகளை மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட தமிழ் பேசும் பொலிஸ் மூலம் நெறிப்படுத்தலாம் என்பதாலும்,

சர்வதேச சமூகத்தினதும், குறிப்பாக அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் முழுமையான ஆதரவும் இந்த ஏற்பாட்டிற்கு இருப்பதாலும்,

இந்த முதலாவது கட்டமே கணிசமான அளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு இறுதிக் கட்டத்தை நோக்கி ஆராக்கியமாக நகர முடிந்ததாக இருக்கும். குறிப்பாக 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் பாரிய மாற்றங்களை இதன் மூலம் உருவாக்கி விடலாம்.

எங்களது பாராளுமன்ற, உள்ளுராட்சி சபை, மற்றும் அமைச்சு சார்ந்த பிரதிநிதித்துவங்களை கொண்டே எமது மக்களை நாம் பெரும் திரட்சியாக சரியான திசை வழிக்கு அழைத்து வந்திருக்கின்றோம். நாம் மக்களிடம் சென்றிருக்கின்றோம். மக்கள் எங்களை நாடி வந்திருக்கின்றார். ஆகவே ஒரு இடைக்கால நிர்வாகம் என்ற கட்மைப்பு கிடைக்குமேயானால் மக்கள் அதை இன்னும் அதிகளவில் நாடி வருவார்கள். அந்த பலத்தோடு இடைக்கால தீர்வை நடைமுறைப்படுத்தலாம். இறுதித்தீர்வு நோக்கியும் விரைவாக செல்லலாம்.

கேள்வி: இடைக்கால நிர்வாக சபைக்கு இப்போது என்ன தேவை வந்துள்ளது? ஏனென்றால் இப்போது வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது நடைமுறைக்குச் சாத்தியமா?

பதில்: இடைக்கால நிர்வாக சபைக்கு என்ன தேவை இருக்கின்றது என்பதை முதல் கேள்வியிலேயே கூறியிருக்கின்றேன்.

சகல தமிழ் பேசும் தரப்பினரதும் போராட்டங்களாலும், தியாகளாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து ஒரே அரசியல் அலகாக இந்தியா கொடுத்திருந்தது. நாங்கள் அதனை இணைந்து செயற்பட்டு நிரந்தர அலகாக்கி இருக்கவேண்டும். நமது ஒற்றுமையின்மையாலும் விட்டுக் கொடுப்புகளின்மையாலும் ஆட்டம் காண வைத்துப் பிரித்து விட்டோம். அது தமிழ்த் தலைமைத்துவத்திலுள்ள பிரச்சினை. ஏந்தவொரு அரசும் தங்களது நலன்களில் இருந்து கொண்டுதான் பிரச்சனைகளைப் பார்ப்பார்கள். நாங்கள் தான் எங்களது மக்களது நலன்களைச் சரியாக முன்னெடுக்க வேண்டும். இருக்கிறவன் சரியாக இருந்தால் சிரைக்கிறவன் சரியாக சிரைப்பான் என்பது முதுமொழி!

இலங்கை அரசு அரசியல் தீர்வை கொடுக்க முன்வைத்தால் இடைக்காலத்தீர்வைக் கேட்பதும், அதற்கு இணங்கி அரசாங்கம் இடைக்கால நிர்வாகத்தைக் கொடுக்க முன்வந்தால் சீச்சீ…. அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று கேட்பதும், இதை வைத்து யுத்தத்தை தெடருவதும்தான் புலித்தலைமையின் திட்டமிட்ட செயலாக தொடருகின்றது.

ஆகவே, எது கிடைக்கின்றதோ அதிலிருந்து ஆரம்பிப்பதே நல்லது. எது நடைமுறைச்சாத்தியமோ அதனை முதலில் பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். இதில் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்ற விருப்பங்களும் இருக்கவேண்டும்.

பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டுவிடும்
என்ற எச்சரிக்கையுணர்வு இருக்க வேண்டும்.

கேள்வி: அரச தரப்பு இதற்கு ஒத்துக் கொள்ளுமா?

பதில்: அண்மைய வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் த.தே. கூட்டமைப்பினரை நோக்கி சொன்னேன். இதனையே சந்திரிகா காலத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டயினருக்கும் சொல்லியிருந்தேன்.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் தொடர்பான கேள்விக்குறி உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் நீங்கள் அரசுடன் பேரம் பேசுங்கள். இது நல்ல சந்தர்ப்பம். யுத்தத்தை நிறுத்தலாம். மக்களது இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம். பேச்சை நடத்தி தீர்வைக் கொண்டு வரும்படி சொல்லுங்கள் என்று கூறினேன். இதனை அரசிடமும் புலிகளிடமும் சொல்ல வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களை தமிழர் விடுதலை கூட்டணியாக இருந்த போதும் சரி, தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கின்ற போதும் சரி அவர்கள் தவறவிட்டுவிட்னர். அவர்கள் பொம்மலாட்டம் ஆடுகின்றார்கள். புலிகளிடமிருந்து அனுமதி வர வேண்டும் என்பதால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் தலைமைகளே சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு வருகின்றன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மக்களது நலன் கருதிச் செயற்பட்டிருந்தார். இன்று நாம் சாத்தியமான வழிமுறையில் அணுகுவதால் அரசு தரப்பு இதற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத்தீர்வாக எடுத்து நடைமுறைப்படுத்தும் எம்முடைய முயற்சி ஒரு முடிவு நிலைக்கு கொள்கை ரீதியிலான உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இனி நடைமுறைப்படுத்துவதுதான் மிச்சம். தேர்தல் ஒன்றுக்குப் போகலாம். இல்லையென்றால் இடைக்கால நிர்வாகத்திற்குப் போகலாம். அது அடுத்த கட்டம். இது இன்று நேற்றல்ல 15 வருட காலமாக நாம் சொல்லியும் கோரியும் வருவது. சந்திரிகா காலத்தில் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஊடாக அதனைக் கெடுத்து விட்டனர்.. இப்பொழுதும் இந்த மாகாண சபை விடயம் சரிவரப் போகிறது எனும்போது குழப்புவதற்கு திட்டம் போடுகிறார்கள். அதை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கும் எங்கள் மீது சேறடிக்கவும் பார்க்கிறார்கள்.


கேள்வி: இடைக்கால நிர்வாக சபை முதல்வராக நீங்கள் நியமிக்கப்படவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா?

பதில்: இ.நி. சபையானது பிரதம நிர்வாகியால் நிர்வகிக்கப்படுவதாகும்.
பிரதம நிர்வாகியை ஜனாதிபதிதான் தெரிவு செய்வார். முதலமைச்சர் என்பது தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படுவது. நான் அமைச்சுப் பதவியை விட்டு விட்டும் அதற்குச் செல்லத் தயாராக உள்ளேன். ஏனென்றால் நான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்குச் காரணம் மக்கள் படும் கஸ்டங்களுக்கு ஆரம்ப கால ஆயுதப்போராளி என்ற வகையில் நானும் ஒரு காரணமாக இருந்தவன். இந்த தார்மீகப்பொறுப்பை நான் ஏற்கின்றேன். நிர்வாகத்தைச் சரியான முறையில் நடை முறைப்படுத்தி மக்களை அவலங்களில் இருந்து மீட்கவேண்டும்.


கேள்வி: கிழக்கு மாகாண உள்ளுராட்சித் தேர்தலில் நீங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என நினைக்கிறீர்கள்?

பதில்: இன்று கிழக்கில் பிரபாகரன் தலைமயிலான புலிகளின் ஆதிக்கம் வலுவாக குறைந்துள்ளது. அது பிரதான தடையாக இருக்காது. இருந்தாலும் அது கூட எம்மைப்பொறுத்தவரையில் ஒரு தடையல்ல. ஆனால் புலிகளில் இருந்து பிரிந்தவர்களது பிரச்சினைகள் உள்ளது. இப்போது மட்டக்களப்பில் நடக்கும் பல கொலைகள், மிரட்டல்கள், அச்சுறுத்தலுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படைத்தரப்பு அங்கிருந்து புலிகளை விரட்டி விட்டதாக கூறும்போதும் அங்கு சில விடயங்கள் நடக்கின்றன என்றால் அதற்கு வேறு யாரும் காரணமாக இருக்கப் போவதில்லை. அண்மையில் கூட தேர்தலை ஒட்டி சில கொலைகள் அச்சுறுத்தல்கள் நடந்திருக்கின்றன.

இப்பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவுள்ளோம். அதற்கு முன் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஜனநாயக ரீதியாக மக்களுடைய தெரிவுக்கு வரும்படி கூறவுள்ளோம்

நான் மட்டக்களப்பில் பிறந்தால் யாழ்ப்பாணத்தைப் பார்க்க முடியாது என்றில்லை. யாழ்ப்பாணத்தில் பிறந்தால் மட்டக்களப்பைப் பார்க்க முடியாதென்றல்ல. மாத்தறையில் பிறந்த ஜனாதிபதி நாட்டின் அனைத்துப் பகுதி மக்களது பிரச்சினைகளைப் பார்க்க முடியும் என்றால் நான் ஏன் அமைச்சரென்ற ரீதியில் நாடு தழுவிய வகையில் பொறுப்பிருந்தாலும் ஒரு பிராந்திய அரசியல் கட்சி என்ற ரீதியில் எனக்கு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய தார்மீக பொறுப்புள்ளது.

கிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் விடுவித்து விட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை மக்களும் அனுபவிக்க வேண்டும்.. ஏனென்றால் மக்கள் தொடர்ந்தும் கஸ்ரங்களுக்குள் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சுதந்திரத்தை மக்கள் உணரும் வகையில் நான் பணி செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு எனக்குள்ளது. அந்த வகையில் மக்கள் சுயமாக அவர்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சூழல் உருவாக வேண்டும். அதில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது மக்களது தீர்மானம். கிழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாதபடியினால், அங்கு எமது பணிகளில் அளவுகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இவ் இடைவெளிகள் குறையுமென்று நம்புகின்றேன்.

கேள்வி: மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி அமைத்துத் போட்டியிடப் போவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். அண்மையில் ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறதே?

பதில்: வன்முறையைத் தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். அந்த வகையில் எல்லோருடனும் பேசும்போது சேர்ந்து போட்டியிடுவதாக ரி.எம்.வி.பி. கூறியது. பின்னர் வந்த அழுத்தங்களால் தனித்துப் போட்டியிடுவது குறித்த நிலைக்கு அவர்கள் வந்திருக்கலாம். மற்றைய மூன்று கூட்டுக்களும் சேர்ந்து போட்டியிடுவதாக உள்ளது.

இப்பொழுது வன்முறைகளைத் தவிர்ப்பதே நோக்கமாக உள்ளது. எங்களுக்குள் சண்டையிடுவது ஒரு போதுமே ஆரோக்கியமானதாக இருக்காது. அதனால் இதனைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம். தேர்தலில் ஆரோக்கியமான போட்டியாளர்கள் இருந்தால் அதை விரும்புகின்றோம். எவரும் தனித்தோ கூட்டாகவோ போட்டியிடுவது எமக்கு பிரச்சினையில்லை.

கேள்வி: கொழும்பில் இடம்பெறும் கொலைகள், கடத்தல்களின் பின்னணி என்ன என நினைக்கிறீர்கள்?

பதில்: கொலைகளால் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆரம்ப காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் கூட்டுத் தலைமைகளில் நான் இருக்கும் போது உட்கொலைக்கு என்னை நிர்ப்பந்திக்கும் போதுதான் பிரச்சினை ஏற்பட்டது. நான் கொலைகளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் கூட எதிர்ப்புத் தெரிவித்தேன். மனித நேயம் ஜனநாயக விடயங்களைப் பாதுகாத்தேன். அதை மறுத்து அல்லது மீறி விடுதலை என்பது இருக்க முடியாது.

யுத்தம் தொடரும் வரை இது போன்ற வன்முறைகளும் இருக்கும். இவைகளை வன்முறையாளர்கள் தவிர்க்க மாட்டார்கள். மனிதநேயவாதிகளும் ஜனநாயக சக்திகளும் இவைகளை தொடர்ந்தும் கண்டிக்க முன்வரவேண்டும்.
கொலைகளும், கடத்தல்களும் நிறுத்தப்பட வேண்டும். இல்லாமல் அவர்களையும் இவர்களையும் சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. ஆனால் ஈ.பி.டி.பி. யைப் பொறுத்தமட்டில் கருத்தைக் கருத்துக்களால் சந்திக்க வேண்டும். கருவிகளால் அல்ல என்பதே நிலைப்பாடாகும். கொலைகளினூடாக பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கேள்வி: ஆளும் கட்சிகள் மாறும் போதும் நீங்கள் அரச தரப்பிலேயே இருக்கிறீர்கள். எனினும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு உங்களால் ஒரு தீர்வைப் பெற முடியவில்லையே?

பதில்: தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் பலவற்றைப் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் அரசியல் பிரச்சினைகளை தீரப்பதற்கு எங்களுக்கு அரசியல் பலம் வேண்டும். எங்களுக்கு ஒரு ஆசனம் தான் கிடைத்திருக்கிறது. ஒருலட்சம் இந்தியத் துருப்புக்கள் இருந்த போதே அன்றிருந்தவர்களால் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசி மாகாணசபை முறையை நடைமுறைப்படத்தலாம் என்ற கொள்கை ரீதியிலான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அது பெரிய அரசியல் வெற்றி என நான் நினைக்கிறேன். ஒன்றும் கிடக்காத நிலையில் இருப்பதால் கிடைப்பதில் இருந்து கொண்டு ஆரம்பிக்கலாம் என்று தொடங்கியுள்ளோம்

கேள்வி: தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வரையிலான தீர்வுத்திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்த முடியுமாக இருந்தால் போராட்டம் என்பது தேவையற்றது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

பதில்: இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் நாங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் அதைச் செய்திருந்தால் நடைமுறையிலேயே சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருக்கலாம். ஆயுதப்போராட்டம் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கு வர வேண்டும் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இருந்தே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு இறுதித் தீர்வுத்திட்டத்தை சர்வகட்சிக் குழு முன்வைக்குமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இன்றைக்குள்ள நிலையில் அவர்களால் இறுதித் தீர்வை முன்வைப்பது கஸ்டம் அல்லது முன்வைத்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். ஆனாலும் சர்வகட்சி மாநாடு உட்பட சகல முயற்சிகளையும் நாம் வரவேற்கின்றோம்.

சாத்தியப்படும் ஒன்றில் இருந்து நாம் ஆரம்பிப்போம். அதனையே நாம் முன்வைத்துள்ளோம். அதன் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வினைக் கொண்டுவர முடியும் என நம்புகிறேன்.

கேள்வி: யாழ்ப்பாணத்தில் மிக மோசமான கொலைகள் நடந்த கொண்டிருக்கிறது. யாழ். குடா முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களது ஆட்களும் உள்ளனர். இந்தக் கொலைகளை நிறுத்துவதற்கு உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதா?

பதில்: மூக்குள்ள வரை சளி இருப்பது போல் யுத்தம் இருக்கும் வரை இவைகள் தொடர்ந்த படியே இருக்கும். பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கமாக எம்மீதான பழிகளும் சுமத்தப்படுகின்றன. ஆனால் மக்களுக்கு தெரியும் ஈ.பி.டி.பி ஒரு போதும் இந்த வழிமுறையை கையாளப்போவதில்லை என்று.

நீங்கள் சாதாரணமாக அங்கு போய் வருவது போன்று எங்களால் அங்கு போய்வர முடியாது. நாங்களும் பாதுகாப்புடனேயே சென்றுவர வேண்டியுள்ளது.; ஏற்கனவே நான் ஈ.பி.டி.பி. கொலை குறித்து எப்படிப்பார்க்கிறது என்பது பற்றிச் சொல்லிவிட்டேன். இதற்காக இப்போது அமைச்சரவையில் ஒரு பத்திரம் சமர்ப்பித்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது. சரணடையும், அல்லது கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து பாதுகாப்பதே எமது விருப்பம். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்து விட்டது இனி நடைமுறைப்படுத்தும் தேவையுள்ளது.

கேள்வி: விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் இனப்பிரச்சினையைத் தீர்த்து விடலாம் எனச் சொல்கிறீர்கள். இது எந்தளவுக்குச் சாத்தியம்?

பதில்: நான் அப்படிச் சொல்லவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இனப்பிரச்சினைக்கு சுமுகமான நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வுக்கு வரப்போவதில்லை என்பதுதான் என்னுடைய கருத்து அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

தீர்வுகள், பேச்சுக்களின் போது ஒன்றில் இணக்கம் ஏற்பட்டால் இன்னும் ஒன்றை முன்வைப்பது என்ற வகையில் தான் பிரபாகரனது செயற்பாடு இருக்கும்.

ஆனால், நான் இப்போது முன்வைத்துள்ள நடைமுறைக்கு சாத்தியமான தீர்வில் விரும்பியோ விரும்பாமலோ இத்திட்டத்தின் மூன்று கட்டங்களின் முடிவில் புலிகளும் வந்தாக வேண்டும்.

1994 இல் தேர்தல் அறிவிக்கப்படும் போது புலிகள் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனூடாக பிரச்சினைகளைத்தீர்க்க முடியாது எனத் தெரிவித்திருந்தனர். மக்களை பகிஷ்கரிக்கும் படியும் பயமுறுத்தினர். 1998 இல் உள்ளூராட்சி சபை தேர்தலின் போதும் அதையே செய்தார்கள்.

2004 இல் என்ன நடந்தது. அவர்களாகவே தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். தமக்கு தாமே வாக்குப்போட்டு பாராளுமன்றம் வந்தார்கள். ஆனால், வந்து குழப்பிக் கொண்டேயுள்ளனர். பாராளுமன்ற பலத்தை வைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அவர்களிடம் இல்லை. குழப்புவதுதான் நோக்கம்.

2006 இல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது 98 இல் எதிர்த்திருந்த புலிகளும் போட்டியிடுவதற்காக முன்வந்தார்கள். இதுவும் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கமாகவே இருந்தது.

அதனால்தான் நான் பிரபாகரன் இருக்கும்வரைக்கும் பிரச்சினைக்குத் தீர்வு வரப்போவதில்லை எனக்கூறினேன். ஆனால், மூன்றாவது கட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ புலிகளும் வந்தேயாக வேண்டும். புலிகளின் உறுப்பினர்களில் அநேகமானவர்கள். கட்டாயத்தின் பெயரில் பிரபாகரனால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இயல்புச் சூழலில் உறவுகளோடு இணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி: ஒரு முழுமையான தீர்வை முன்வைத்து முறையாக நடைமுறைப்படுத்தினால் விடுதலைப் புலிகள் ஓரம் கட்டலாம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

பதில்: முழுமையான தீர்வு என்றால்?….. முதல் கட்டமாக இடைக்கால நிருவாகசபையை நடைமுறைப்படுத்துவது இரண்டாம் கட்டம் கூடுதலான அதிகாரங்களைக் கொடுப்பது மூன்றாவது நாடே இறுதி இலக்கை நோக்கிப் போகும். அதன்பின் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் வரையில் செயல்நிலைக்கு வந்துவிடும். யுத்தத்தின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது.

கேள்வி: உண்மையிலேயே சிங்களத் தலைமைகள் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமென நம்புகிறீர்களா? தீர்க்கமாட்டார்களென்றுதான் நீங்கள் ஆயுதம் ஏந்தினீர்கள், ஜனநாயக வழியில் தீர்க்கலாம் என்றுதான் சிங்களத் தலைமைகளுடன் இன்று இணைந்துள்ளீர்கள். அதில் எந்தளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பதில்: இவர்களை நம்புவதா இல்லையா என்பது பிரச்சினையல்ல. அவர்களை நமது வியூகத்துக்குள் கொண்டு வருதல் வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஒரு லட்சம் இந்தியத் துருப்புக்கள் இருந்தபோது அப்போதிருந்த தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக அதைப் பயன்படுத்தவில்லை. சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளனர்.

ஏன் அப்படி இருந்தது. சூழல் வரும்போது கொண்டு செல்லாமையால்தான். இந்த மாகாணசபை முறை கட்சித் தலைவர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஊடாக வெல்லலாம் என்று நம்பிக்கையுள்ளது. அதற்குரிய தளத்தை உருவாக்குவதற்கு யோசிக்கிறேன்.

கேள்வி: மகேஸ்வரனது கொலை தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்: இது ஒரு அரசியல் குற்றச்சாட்டு. ஆரம்பத்தில் லலித் அத்துலத் முதலி, கொப்பேகடுவ, மற்றும் சிலரையும் கொலை செய்ததாக எம்மீது குற்றஞ்சாட்டிருந்தது. பின்னர் அவை புலிகளால் செய்யப்பட்டதாக நிரூபணமானது. சந்திரிகாவும் தன்னைக் கொல்ல வந்ததாகவும் அது தொடர்பாக பத்திரிகைளிலும் அறிக்கையும் விடுத்தார். ஆனால் தேர்தலின் பின் எல்லாம் மாறியது. மகேஸ்வரனைக் கொலை செய்தது புலிகள் என்பது உறுதியாகியிருக்கிறது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

மகேஸ்வரனின் அரசியல் மற்றும் வியாபார விடங்களில் ஏற்பட்ட முரண்பாடே புலிகள் அவரைக் கொலை செய்யக் காரணமாகும். எங்களுக்கு மகேஸ்வரனைக் கொலை செய்ய வேண்டிய தேவையில்லை. கருத்து ரீதியாக மகேஸ்வரனோடு இடைவெளிகள் இருந்திருக்கலாம். ஆனால் மகேஸ்வரன் புலிகளை எதிர்த்துக் கொண்டு தனது அரசியலையும், வியாபாரத்தையும் கொண்டு செல்வதில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், மகேஸ்வரன் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் நட்பாகவே இருந்தார். புலிகளுக்கு வரி செலுத்தாமல் தமிழர் ஒருவர் சாதாரண தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றையே நடத்தமுடியாது என்ற நெருக்கடிகள் மக்களுக்கு இருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அப்படியிருக்க கப்பல்களை வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்த மகேஸ்வரனுக்கு புலிகளிடமிருந்து எத்தகைய நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். கொலைகளுக்கூடாக பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.