www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, December 11, 2009

சர்வதேச மனித உரிமை தினத்தில் ஒரே மேடையில் தோன்றிய தமிழ்த் தலைமைகள்!

மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினம் தொடர்பான மாபெரும் நிகழ்வு மனித உரிமைகள் இல்ல இயக்குனர் ஷெரீன் சேவியர் தலைமையில் கடந்த 2009.12.10 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபா அணி) செயலாளர் சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியத்தர் திரு சங்கையா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமான மௌலவி சுபியான் போன்றோர் ஒன்றாக ஒரே மேடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனவுக்கு மேடையில் ஆசனம் ஒதுக்கப்படாமையினால் பார்வையாளர்களில் ஒருவராக முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளிடம் பார்வையாளர்கள் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வினாக்கள் தொடுத்த போது அவ்வினாக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஒரே நேரத்தில் இணைந்து பதிலளித்தமை சிறப்பானதாக இருந்தது.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Thursday, December 10, 2009

சர்வதேச மனித உரிமைகள் தினம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மனித உரிமைகளுக்காகவும் மானுட நேயத்திற்காகவும் மனித குலத்தின் மனச்சாட்சிகளாக நின்று தங்களை அர்ப்பணம் செய்த மனித உரிமைப் போராளிகள் மற்றும் மனித உரிமைவாதிகள் அனைவருக்கும் என்றும் நாம் மரியாதை செலுத்துகின்றோம்!

இன்றைய தினம் மனித உரிமைகள் தினம். 1948 ஆம் ஆண்டு மார்கழி பத்தாம் திகதி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையானது மனித உரிமைகள் குறித்த உலத்தின் பிரகடனத்தை சட்ட ரீதியாக ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கீகாரம் வழங்கியது.

அன்றிலிருந்து இன்று வரை அறுபது ஆண்டுகள் கடந்தோடி விட்ட நிலையிலும் மனித உரிமைகள் என்பது வெறுமனே சட்டங்களால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய சகல தரப்பினரதும் மன விருப்பங்களால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்பது மனிதகுலத்தின் மனத்துயரங்களாக இருக்கின்றன.

மனித உரிமைகள் யாவும் மரணித்துவிட்ட ஒரு தேசத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நலிந்து போன எமது மக்களோடு நாமும் இதுவரை காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.

மனித கௌரவங்களை மதிக்கவும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற மனுக்குலத்தின் தர்ம நியாயங்களை ஏற்கவும் தங்களை தயாராக்கிக் கொண்டு தங்களது மன விருப்பங்களோடு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்றும் எம்மத்தியில் மனித உரிமைகள் உயிர்வாழ்ந்திருக்கும்.

நாம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தையும், அதன் சட்ட திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் மனித உரிமைகள் குறித்து சிந்தித்திருந்தவர்கள் அல்ல.

மனித உரிமைகள் குறித்த சிந்தனை என்பது இரத்தமும் தசையுமாக எமது உயிரோடும், உணர்வுகளோடும் ஒன்று கலந்து விட்ட ஒன்று. எமது வரலாற்றின் ஆரம்பங்களில் நாம் மனித உரிமை செயற்பாடுகளின் ஊடாகவும் மக்களின் அவலங்களைக் கண்டு அதற்குத் தீர்வு காணும் சமூப் பணிகளின் ஊடாகவும் மக்கள் சமூகம் குறித்த உயரிய முற்போக்கு சிந்தனைகளின் ஊடாகவுமே ஆயுதப்போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்திருந்தோம்.

அன்று நடந்த ஆயுதப்போராட்ட சூழலிலும் கூட எமது கைகளில் ஆயுதங்கள் இருந்தாலும் எமது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் மனித நேயப்பண்புகளும் மனித உரிமைகள் குறித்த சமூக அக்கறையுமே மேலோங்கி காணப்பட்டன.

ஒரு வைத்தியரானவர் உயிர்களைக் காப்பற்றும் நோக்கில் சத்திர சிகிச்சை செய்வதற்காகவே தனது கையில் கத்தியை ஏந்தியிருப்பார். அதுபோலவே எமது கைகளில் இருந்த ஆயுதங்களும் வைத்தியரின் கைகளில் இருக்கும் கத்திக்கு சமனானவைகள் என்பதை நாம் எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் மெய்ப்பித்து காட்டியிருக்கின்றோம்.

ஆனாலும், அதே வைத்தியர் ஏந்தியிருக்கும் உயிர்காக்கும் கத்தியானது மக்களை நேசிக்க தெரியாத மக்கள் விரோத சக்திகளின் கைகளில் சிக்கும் போது அந்த கத்தியானது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக மனித உயிர்களைக் கொன்று பழி தீர்க்கவே பெரிதும் பயன்படுகின்றது.

இதனால் மனித உரிமை மீறல்கள் என்பது எமது தேசத்தில் முன்னரை விடவும்
பல மடங்கு பெருகி எமது மக்களின் மீது பாரிய அவலங்களை சுமத்தியுள்ளது.

நீதியானதும் நேர்மையானதும் குறித்த இலக்கை எட்டி விட முடிந்த வழிமுறையையும் கொண்ட ஆயுதப்போராட்டத்தில் எமது மக்கள் மனித உரிமை மீறல்களை சந்தித்திருந்த போது மாபெரும் இலட்சியக் கனவுகளுக்காக அந்தத் துயரங்களையும் ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றோம்.

ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறி நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு மாறாக அது திசை வழி மாறி சென்ற போதுதான் எமது மக்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு உட்பட வேண்டிய அவலங்கள் இனியும் தேவைதானா என்று நாம் சிந்தித்தோம்.

எந்த இலக்கையும் அடைய முடியாத ஓர் அழிவு யுத்தத்தின் மூலம் எமது மக்கள் அவலங்களை சுமப்பவர்களாகவும் மனித உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்வதற்கே நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

ஆகவேதான் நாம் இது குறித்து தொலை தூரநோக்குடன் தீர்க்கதரிசனமாக எமது கருத்துக்களை உறுதியாக தெரிவித்து வந்திருக்கின்றோம்.

வேர்கள் இருக்கும் போது கிளைகளை மட்டும் வெட்டி விடுவதில் எந்த விமோசனங்களும் இருக்கப்போவதில்லை என்றும் தொடர்கின்ற அழிவு யுத்தம் நீடித்து செல்லும் வரை மனித உரிமை மீறல்களும் தொடர வேண்டிய துயரங்கள் ஏற்படும் என்றும் தொடர்ந்து நாம் கூறி வந்திருக்கின்றோம்.

ஆகவே அழிவு யுத்தத்தை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்விற்கு உடன்பட்டு செல்ல வேண்டும் என்றும் அதன் ஊடாகவே மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து வந்திருக்கின்ற அதே வேளையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்கியிருந்த சக்திகள் குறித்து நாம் எமது கண்டனங்களையும் தெரிவித்து வந்திருக்கின்றோம்.

மனித குலத்தின் உரிமைகள் குறித்த அக்கறையின்மையும் அவற்றை அவமதித்தலும், மனித குலத்தின் மனச்சாட்சியை அவமானப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இது வரை இடமளித்து வந்திருக்கின்றது.

ஆனாலும், யுத்தம் தொடரும் வரை மனித உரிமை மீறல்களும் தொடரவே வழி வகுக்கும் என்று நாம் ஆரம்பங்களில் இருந்தே கூறி வந்திருப்பது போல இன்று யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த கையோடு எமது மக்கள் மெல்லென நிம்மதி மூச்சு விடத்தொடங்கியிருக்கின்றார்கள்.


எமது அரசியல் வரலாற்றில் 2009 மே 18 க்கு முன் என்றும், அதற்குப் பின் என்றும் இரு வேறு வரலாறுகள் உண்டு என்பதை நாம் இன்று காண முடிகின்றது. 2009 மே 18 ஆம் திகதிக்குப் பின்னர் எமது தேசத்தில் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் குறைவடைந்து விட்டதை நாம் இன்று உணர முடிகின்றது.

இனியொரு புது விதி படைப்போம் என்றும், அதை எந்நாளும் காப்போம் என்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உணர்வதற்கான காலச்சூழல் ஒன்று இன்று உருவாகியிருக்கின்றது.

ஆயுத வன்முறைகளுக்கு இனி இங்கு எவரும் அனுமதி வழங்க முடியாது. எமது மக்களை அச்சுறுத்தவும் அவர்களைப் பலாத்காரப்படுத்தி எந்தவொரு செயல்களில் ஈடுபடுத்தவும், வரி என்றும் கப்பம் என்றும் எமது மக்களை சுரண்டி துன்புறுத்தவும், மனிதப்படுகொலைகள் ஆட்கடத்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு இங்கு இடமளிக்கவும் முடியாது என்ற உறுதியும் மன விருப்பங்களும் சகல தரப்பினர் மத்தியில் இருந்தும் உணர்வுப்பூர்வமாக உருவாக வேண்டும்.

இதே வேளை வன்முறைகளைத் தூண்டி விடும் தீயசக்திகள் குறித்தும் விழிப்புடன் இருக்கவும் எமது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் நான் இன்றைய தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மனிதக் குடும்பம் சார்ந்த அனைவரதும் உணர்வுகளையும் கௌரவத்தையும் மனிதர்கள் யாவரும் சமன் என்ற பாகுபடுத்தப்பட முடியாத உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதுவே உலகத்தின் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்த வாசகத்தை முகப்பாகக் கொண்டதே மனித உரிமை பிரகடனம் ஆகும்.

ஆகவே பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் விரும்பிய அரசியல் கட்சிகளை சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரம், விரும்பிய இடங்களை நோக்கிய நடமாடும் சுதந்திரம், அச்சத்தில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுதலை பெறுதல் என மனிதன் பூரண இன்பத்துடன் வாழ முடிந்த உலகத்தின் வருகையே சாதாரண மக்களின் மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்து வருகிறது.

இதே வேளை ஆண்கள் பெண்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகள் முதற்கொண்டு மனித கௌரவம் சமூக முன்னேற்றம் உயர்ந்த வாழ்க்கைத்தரம் என்பவற்றை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

பெருமழை பெய்து ஓய்ந்தாலும் தூறல்கள் இன்னமும் ஓயாது என்பது போலன்றி, யுத்தம் ஓய்ந்தாலும் சிறு சிறு வன்முறைகள் கூட எங்கும் நடந்துவிட யாரும் அனுதிக்க முடியாது.

நடைமுறைச்சாத்தியமான ஒரு வழிமுறையின் மூலம் அடைய முடிந்த அரசியல் தீர்வின் ஊடாக அனைத்து மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்த சகல தரப்பினரும் உறுதியோடு உழைக்க முன்வரவேண்டிய சூழல் இப்போது உதயமாகியுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது நீதியான ஆயுதப்போராட்டத்தினால் எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதன் அடிப்டையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதோடு கட்டம் கட்டமாக கிடைக்க வேண்டிய நியாயமான அரசியல் அதிகாரங்களைப் பெற்று எமது இலக்கு நோக்கி முன்னேறவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.

நடந்து முடிந்த யுத்தத்தின் எச்ச சொச்சங்களை மனித அவலங்களாக இன்னமும் எம் கண் முன்பாக நாம் காண்கின்றோம். அந்த எச்ச சொச்சங்களையும் இல்லாதொழிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாத்தல் என அனைத்து விடயங்களையும் விரைவு படுத்துமாறு நாம் அரசாங்கத்துடன் பேசி வருகின்றோம்.

இதே வேளை யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்வர்கள் சரணடைந்தவர்கள் என சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றோம்.

உண்பதற்கு உணவில்லை என்று எங்கே ஓர் அழுகுரல் கேட்கின்றதோ அங்கேயும் மனித உரிமை மீறல் நடக்கின்றது என்பதை உணர்ந்து உணவு முதற்கொண்டு உரிமைகள் வரைக்கும் பெறுவதற்காக நடைமுறை சாத்தியமான வழிமுறை நோக்கி அனைத்து மக்களும் அரசியல் சக்திகளும் உறுதியுடன் அணிதிரள வேண்டும் என நான் இன்றைய மனித உரிமைகள் தினத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.

மனித உரிமைகளுக்காகவும் மானுட நீதிக்காகவும் இன ஐக்கியம் இன சமத்துவதற்காகவும் அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.

Friday, December 4, 2009

மஹிந்தவை ஆதரிக்க 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஈபிடிபி!

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதாகவும், அதற்காக பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை தயாரித்துள்ளதாகவும் அதற்கிணங்கவே எதிர்காலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடருமென ஈபிடிபி இனர் தெரிவித்துள்ளனர்.

ஈபிடிபி இனரின் பத்து அம்சக் கோரிக்கை:

1. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.

2. தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.

3. இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் - இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும், இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.

4. வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.

5. கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.

6. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் சரணடைந்துள்ளவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வளித்தல் மற்றும் காணாமற்போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

7. கடந்தகாலங்களில் பொருளாதார அபிவிருத்தி கவனிக்கப்படாமலும் நீண்டகால யுத்த சூழ்நிலைகளால் அபிவிருத்தி காணப்படாமலும் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

8. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.

9. தமிழ் மொழிக்குரிய சமத்துவ அந்தஸ்தை நிர்வாக ரீதியில் திட்டமிட்டு விரிவாக்கி, இலங்கை அரச நிர்வாகத்தில் தமிழ் பேசும் மக்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற நிலையை அகற்றி எமது மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதோடு தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டின் பங்காளிகளே எனும் நிலையை உருவாக்குதல். இலங்கையின் மத்திய பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல்.

10. தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வரலாற்று வாழ்விடங்களிலிருந்து தாம் அகற்றப்பட்டு விடுவோம் என எழுந்திருக்கும் சந்தேகங்களை நீக்கி ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது வரலாற்று வாழ்விடம் அவர்களுக்கே உரியது என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்ட ஈபிடிபி அமைப்பினர் பத்து அம்சங்கள் கொண்ட கோரிக்கையினை அறிக்கையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 8, 2009

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி!


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று 2009.11.08 ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீடு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி.
(படத்தை அழுத்தி செய்தியை வாசிக்கலாம்)

Saturday, November 7, 2009

தினமுரசு பத்திராதிபதி ரமேஸின் 10 ஆம் ஆண்டு நினைவு - வீடியோ

Tuesday, November 3, 2009

அற்புதனே மீண்டும் வா!


அற்புதனே மீண்டும் வா!

ஜனநாயகம் கூறும் நாட்டில்
மனிதத்தை நேசித்த
மானுடனுக்கா
நடுத் தெருவில்
துப்பாக்கி வேட்டெனும்
மரண தண்டனை!

உண்மையை உரத்துக் கூற
படிமம் வகுத்துத் தந்த
சிற்பிக்கா
மரண தண்டனை!

அரைஞாண்கயிற்றால்
கடிவாளமிட்டு நடுவன்
ஊடகத்துறையை
நகர்த்தியதால்
கிடைத்த கிரீடமோ
அநாதைப் பிணமெனும்
மரண தண்டனை!

ஊடகவியலாளனுக்கும் அப்பால்
மரணித்தவன் மானிடனென்பதால்
கொலைஞனைக் கண்டிக்க
முள்ளந்தண்டை நிமிர்த்தாத
ஊடகங்களே
ஏன் மௌனித்தன உங்கள் பேனாக்கள்
எழுதுகோலுக்குமா
மரண தண்டனை!

புது இராச்சியம் படைத்த அற்புதனே
உன் பரிணாமத்திலுமா ஓட்டைகள்
எழுத்தாணிக்கு செங்குருதி மையிட்டு
சமூகத்துக்கு உருக்கொடுத்த
பிரமாவே
எதற்காக உனக்கு
மரண தண்டனை!

கிழித்ததும் சீறிக்கொள்ளும்
தீக்குச்சாய் செய்தி பகரும்
ஊடகங்களே
உங்கள் பக்கங்களையும்
மௌனிக்க வைத்தனவா
மரண தண்டனை!

அற்புதனே மீள் பிறப்பு
நிச்சயம் இருப்பின்
எழுத்தாளனாக
மீண்டும் வா
கொலைஞர்களை
கழுமரத்தில் ஏற்றி
வழங்கிடுவோம்
மரண தண்டனை!

Sunday, November 1, 2009

அமைச்சர் தேவானந்தாவுக்கான பகிரங்க மடலும், சனீஸ்வரனின் மடலுக்கான பதிலும்!!

அன்புடன் அமைச்சர் தேவானந்தாவுக்கு ஓர் பகிரங்க மடல்! எனும் தலைப்பில் நெருப்புக்கு வந்த மடலாக பதிவாகி இருந்த சனீஸ்வரனின் கட்டுரைக்கு பதில் கொடுக்கும் வகையில் "வெளிச்சம்" இணையத்தில் சனீஸ்வரனின் மடலுக்கான பதில்... எனும் தலைப்பில் பிரசுரமான கட்டுரை சூடு பிடித்துள்ள நிலையில் "ஜனநாயகன்" அதனை பதிவு செய்கின்றது।


அன்புடன் அமைச்சர் தேவானந்தாவுக்கு ஓர் பகிரங்க மடல்! - நெருப்பு


.....


சனீஸ்வரனின் மடலுக்கான பதில்... - வெளிச்சம்

(தலைப்புக்களை அழுத்தி கட்டுரையை வாசிக்கலாம்)

Thursday, October 29, 2009

யாழ், மாநகர சபை ஆரம்ப நிகழ்வில் தமிழரசுக் கட்சி பங்கேற்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதலாவது அமர்வு நேற்று 28 ஆம் திகதி மாலை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் ஆரம்பமாகியது, இவ் ஆரம்ப நிகழ்வுக்கு சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இன்னோரன்ன அதிதிகள் வந்திருந்தனர்.

இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைமை உறுப்பினரான திரு.மு.றெமிடியஸ் கலந்து கொண்டதுடன் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்கள்

Sunday, October 18, 2009

வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து யாழ்.வந்த 1066 பேர்!

வன்னி யுத்தத்தில் சிக்கியதால் இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்த 366 குடும்பங்களின் 1066 பேர் முதற்கட்டமாக இன்று (18.10.2009) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இம்மக்களுக்கான பதிவுகள் பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் எதிர்வரும் புதன்கிழமை அவர்களது பிரதேச செயலகங்களில் 5000 ரூபா வீதம் முற்பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 20000 ரூபா அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்.

அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.அசோக் சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட பல அரச திணைக்கள அதிகாரிகளும் இம் மக்களைச் சென்று பார்வையிட்டனர்.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Monday, October 12, 2009

தமிழக நாடாளுமன்ற குழுவினரின் யாழ்ப்பாண விஜயம்!

இலங்கைக்கு வருகை தந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண மக்களினால் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மகத்தான வரவேற்புடன் அழைத்து வரப்பட்டனர்.

இக் குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று யாழ்ப்பாண யாழ் பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்டனர், யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், சமயத்தலைவர்கள், கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள், மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இந்தச் சந்திப்பையடுத்து நிவாரணக் கிராமங்களில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணாக்கர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Sunday, October 11, 2009

தமிழ் இலக்கிய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு!

தமிழ் இலக்கிய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது, இவ் ஆரம்ப நிகழ்ச்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் ஆரம்பித்து வைக்க பண்பாட்டுப் பேரணி அரசடி வீதி ஊடாக யாழ்.இந்து மகளிர் கல்லூரியைச் சென்றடைந்தது.

ஆனைப்பந்திப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடையில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இந்தப் பண்பாட்டுப் பேரணியைப் பார்வையிட்டனர்.

யாழ். இந்துக் கல்லூரியில் இராசநாயகம் முதலியார் அரங்கில் கலாபூஷணம் இராசு சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் தமிழ்தாயின் உருவச்சிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறியும் மலர் மாலை அணிவிக்க பல்வேறு நடன, நாடக நிகழ்வுகளும் அரங்கேறின.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Saturday, October 10, 2009

யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு நேற்றுக் காலை ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்து வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் செப்பனிடப்பட்ட வீதியைப் பார்வையிட்டதுடன் அங்கு பயிலும் மாணவர்களுடன் மற்றும் அதிபர், ஆசிரியர்களிடமும் கல்லூரி தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

அமைச்சரின் கல்லூரி விஜயத்தின் போது ஈபிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Thursday, October 8, 2009

யாழ்ப்பாணத்தில் தமிழ் இலக்கியப் பெருவிழா!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் இராமலிங்கம் அரங்கில், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் இலக்கியப் பெருவிழா நேற்று மாலை (08.10.2009) மேள தாள வாத்தியங்கள் முழங்க ஆரம்பமானது.

ஈபிடிபி செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நல்லூர் பிச்சையப்பா ரஜீவன் குழுவினரின் நாதஸ்வர இசைக்கு மத்தியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இவ்விழாவில் வரவேற்பு நடனம், மீனவ நடனம், பாம்பு நடனம், வள்ளி திருமணம் இசை நாடனம் போன்ற பல்வேறு நடன நிகழ்வுகள் அரங்கேறின.

நேற்றைய தமிழ் இலக்கியப் பெருவிழாவில் யாழ்.அரசாங்க அதிபர் திரு.கே.கணேஷ், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.இளங்கோவன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி உட்படப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இசை வழங்கிய நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Tuesday, October 6, 2009

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிய 11ஆம் ஆண்டு விழா!

யாழ்ப்பாண மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிய 11 ஆம் ஆண்டு விழா இன்று (06.10.2009) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்றியச் செயலர் திரு.செல்வராஜா தலைமையில் நடைபெற்றது, இந் நிகழ்வுக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இறுதியில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவாகிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசில்களையும் அமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.

Monday, October 5, 2009

தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் புனருத்தாரண கூட்டம்!

யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (2009.10.04) முற்பகல் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் புனருத்தாரண கூட்டம் நடைபெற்றது, இக் கூட்டத்துக்கு பிரதம அதிதியாக ஈபிடிபி செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பதிப்பிக்க ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை இவ் அமைப்புக்கு வழங்கினார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, உள்ளூராட்சி சபை உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் மற்றும் எழுத்தாளர்களான செங்கையாழியான் கலாநிதி க.குணராசா, திரு.சிறிபதி, திரு.சாந்தன், திரு.சட்டநாதன், திரு.சோ.பத்மநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.

இம் அமர்வில் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக செங்கை ஆழியான், உப தலைவர்களாக சாந்தன் மற்றும் தெணியான் செயலாளராக சிறிபதி, உப செயலாளராக யோகேஸ்வரி சிவப்பிரகாசம் பொருளாளராக சோ. பத்மநாதன் மற்றும் நிர்வாக் குழு உறுப்பினர்களாக த.தணிகாசலம் தாட்சாயிணி த.கலாமணி இயல்வாணன் நயினை கிருபானந்தன் ஆனந்தன் பொன்.சுகந்தன் சங்கர் கே.வி.குணசேகரம் ஆகியோர் தெரிவாகினர்.













Thursday, October 1, 2009

யாழ் இலக்கியப்படைப்பாளிகள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தவின் சிறப்புரை!.

நேசமுடன் அனைவருக்கும் வணக்கம்!

எங்களது அழைப்பை ஏற்று மன விருப்பங்களோடு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்கின்றேன். நாங்கள் உங்களை இங்கு அழைத்திருப்பதன் நோக்கம் நீங்கள் எங்களை துதித்து பாட வேண்டும் என்பதற்காகவோ அன்றி புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காகவோ அல்ல.

கலை இலக்கியங்களை நீங்கள் சுதந்திரமாகப் படைக்கவேண்டும். அதற்காக நீங்கள் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். உங்களது ஆற்றல்களையும் சிந்தனையின் தேடல்களையும் எமது மக்களுக்காக தொடர்ந்தும் நீங்கள் சரிவரப்பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

இதில் நீங்கள் எதிர் கொள்ளும் தடைகள் எதுவாயினும் அவைகளைக் கண்டறிந்து அந்தத் தடைகளை அகற்றி உங்களை சுதந்திரமான இலக்கியப் படைப்பாளிகளாக நீடித்து வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களை அழைத்திருக்கின்றோம்.

கலை இலக்கியப் படைப்பாளிகள் வெறுமனே கலை இலக்கியங்களை மட்டும் படைத்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். தமது படைப்பிலக்கியங்களுக்கு ஊடாக ஒரு சமுதாயத்தையே புதிதாகப் படைப்பவர்கள் என்றுதான் நான் கருதுகின்றேன். தாம் வாழுகின்ற சமகால சமுதாயத்தில் இருந்து புதியதொரு சமுதாயத்தை படைப்பவர்களே கலை இலக்கியப் படைப்பாளிகளாவர்.

மக்கள் அழுதால் ஒரு படைப்பாளி தானும் அழுவான். மக்கள் சிரித்தால் படைப்பாளி தானும் சிரிப்பான். மக்கள் ஆனந்தக் கூத்தாடினால் அவர்களோடு சேர்ந்து படைப்பாளியும் ஆனந்தக் கூத்தாடுவான்.

எமது போராட்ட வரலாற்றில் எமது மக்கள் அழுதிருக்கின்றார்கள். சிரித்திருக்கின்றார்கள். ஆனாலும் ஆனந்தக் கூத்தாடும் அளவிற்கு எமது மக்கள் இதுவரை முழுமையான மகிழ்ச்சியை அனுபவித்திருக்கவில்லை என்பதை நான் உங்களிடம் கூறி வைக்க விரும்புகின்றேன்.

எமது மக்கள் அழும்போது நீங்கள் அதை இலக்கியங்களாகப் படைக்க விரும்பியிருக்கிறீர்கள். எமது மக்கள் சில வேளைகளில் சிரிக்கும் போதும் அதையும் நீங்கள் இலக்கியங்களாகப் படைக்க விரும்பியிருக்கின்றீர்கள்.

ஆனாலும் கடந்த சில காலங்களில் உங்களால் எமது மக்களின் மன விருப்பங்களைப் புரிந்து கொண்டும் அவைகளை படைப்பிலக்கியங்களாக முழுமையாகக் கொண்டு வருவதற்கு உங்களால் முடியாமல் போய்விட்டது.

காரணம் எழுதுவதற்கான ஜனநாயக சுதந்திரம் என்பது உங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. சுதந்திரமாக எங்களை சிந்திக்க விடு! சுதந்திரமாக எங்களை எழுத விடு!.. சுதந்திரமாக எங்களைப் பேச விடு என்று நீங்கள் கேட்பதற்கான சுதந்திரம் கூட எமது தேசத்தில் மறுக்கப்பட்டிருந்தது.

உங்களது ஜனநாயக உரிமைகளை நீங்கள் பல்வேறு காலச்சூழல்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் காவு கொடுத்து விட்டீர்கள் என்பதையும் இந்த இடத்தில் நான் கவலையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதற்குக் காரணம் உங்களது பேனாமுனையின் வலிமையை துப்பாக்கி முனைகள் அமுக்கி வைத்திருந்திருந்தன என்பதை நான் மறுப்பதற்கில்லை. ஆனாலும் துப்பாக்கி முனைகளை விடவும் பேனா முனையே வலிமை மிக்கது என்ற உண்மையை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்வதற்கான காலம் இன்று உருவாகி வருகின்றது.

உங்களைப் போல் எமது ஈழத்து கவிஞை ஒருவர் எழுதிய வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றது.

சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக
எமது கடந்த கால வரலாற்றை கொச்சைப்படுத்த
நான் விரும்பவில்லை!...


இவ்வாறு அந்த கவிஞை கூறியது போல் ஒரு காலத்தில் எமது தேசத்தில் நடந்த ஆயுதப்போராட்டத்தை இன்றைய எமது சமகால சூழலுக்காக நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

ஆரம்பங்களில் நடந்தது ஒரு நீதியான ஆயுதப்போராட்டம். அதில் நானும் ஒரு முன்னணி போராளியாக இருந்து ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி வந்திருக்கிறேன்.

அப்போது பலதும் பத்தும் என்று பல்வேறு பன்முகச்சிந்தனைகளும் முடிந்தளவிற்கு உயிர்வாழ்ந்திருக்கின்றன. தவறுகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக சுதந்திரம் என்பது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கின்றது.

தாம் மட்டும் ஆள வேண்டும், அதற்காக தாம் மட்டும் போராட வேண்டும் என்ற ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனைகள் என்று உருவாக்கப்பட்டதோ அப்போதுதான் எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்தது.

பல்வேறு விடுதலைப்போராட்ட அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. எழுத்தாளர்கள் கவிஞர்கள் வானொலிக்கலைஞர்கள் நாடகக்கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தாம் வாழ்வதற்கு கூட சுதந்திரம் இல்லாத தேசம் என்று எண்ணி எமது தேசத்தை விட்டு புலம்பெயர்ந்து ஓடி விட்டனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் அச்சத்தில் உறைந்து போய் மௌனமாகி விட்டனர்.

சிலர் தவறான வழிமுறையின் பக்கம் நின்று எமது மக்களை இருண்ட யுகத்தினுள் தள்ளி விடுவதற்கு தங்களது பேனா முனைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இத்தகைய சூழலில்தான் நாமும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஜனநாயக வழிமுறைக்கு வந்திருந்தோம். அப்போது கூட படைப்பிலக்கிய வாதிகளான உங்களுக்கு உரிய சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் தந்திரங்கள் இங்கு கையாளப்பட்டிருக்கவில்லை. வெறும் சுயலாபங்களுக்காகக் கிடைத்த சந்தர்ப்பங்கள் யாவற்றையும் சில அரசியல் தலைமைகள் தவறவிட்டிருக்கின்றன.

சப்பாத்துக்கு அளவாக கால்களை வெட்டி விட முடியாது. கால்களுக்கு அளவாகவே சாப்பாத்துக்களைத் தேட வேண்டும். இந்த ஜதார்த்தங்களை தமிழ் அரசியல் தலைமைகள் பலவும் உணர்ந்திருக்கவில்லை.

இதுவரை கனிந்து வந்திருந்த அமைதி பேச்சு வார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்களின் போது தங்களைப் படைப்பிலக்கிய வாதிகளாகக் காட்டிக்கொண்ட பலரும் தங்களது எழுத்தாற்றலை எமது மக்களின் மகிழ்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கவில்லை.

தந்ததை வாங்கி தலை குனிந்து கொள்ள
எங்கள் தலைவன் ஒன்றும் அரபாத் அல்ல!


இவ்வாறு கவிதைகள் எழுதி தமிழ் அரசியல் தலைமைகளைத் தொடர்ந்தும் தவறான வழிமுறை நோக்கி செல்வதற்கே தங்களது எழுத்தாற்றலை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது போன்ற தவறான வழிமுறைகளுக்கு ஒத்துப்போகும் இலக்கியங்களுக்கே இங்கு அனுமதியும் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தன.

ஒரு போராட்ட சூழலில் சுயமான படைப்பிலக்கியங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கான உரிமைகளை போராட்டத்தை வழி நடத்தி செல்லும் தலைமைகள் படைப்பிலக்கிய வாதிகளுக்கு இங்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனாலும் அது இங்கு நடந்திருக்கவில்லை.

துப்பாக்கி முனை என்பது எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதை விடவும் உயர்ந்ததாக பேனா முனை என்பது மேலெழுந்து துப்பாக்கிகளை வழி நடத்தி செல்வதற்கு இங்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அதுவும் இங்கு நடந்திருக்கவில்லை.

எழுதுவதற்கே சுதந்திரமில்லாத ஒரு சூழலில் எந்தவொரு போராட்டத்தையும் வெற்றியின் இலக்கு நோக்கி நகர்த்த முடியாது. இந்த உண்மையை இன்று சகல தரப்பினரும் உணர்ந்திருக்கின்றார்கள்.

இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி. ஒவ்வொரு காலச்சூழலிலும் நடக்கின்றன அரசியல், சமூக தன்மைகளை அடுத்து வரும் சந்ததியின் கண் முன்பாக எடுத்து நிறுத்துவதே இலக்கியமாகும்.

கலை கலைக்காக அல்ல. கலை மக்களுக்காகவே என்பதுதான் உண்மை. இது போலவே இலக்கியம் என்பதும் இலக்கியத்திற்காக மட்டுமல்ல. இலக்கியமும் மக்களுக்கானதே!

படைப்பிலக்கியங்களில் அரசியல் கலந்து விடக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடிந்த ஒன்றல்ல. அரசியல் கலக்காத தூய இலக்கியங்களே படைப்பிலக்கியங்கள் என்று வாதிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் கருதவில்லை.

ஆனாலும் உங்களது படைப்பிலக்கியங்களில் அரசியல் கலந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதில் படைப்பிலக்கிய வாதிகளான உங்களது தீர்மானங்களே பிரதானமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களது விருப்பங்களைப்போலவே இலக்கியங்களை படைப்பதற்கான சுதந்திரம் எங்கும் இருக்க வேண்டும்.

உங்களது படைப்பிலக்கியங்களில் நீங்கள் வாழும் சமகால சமூக பொருளாதாரம் பற்றிய விடயங்களை மட்டும் வெளிக்கொண்டு வரவேண்டுமாயின் அதையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். அரசியல் விடயங்கள் குறித்து நீங்கள் உங்களது படைப்பிலக்கியங்களில் எழுத வேண்டுமாயின் அதையும் நான் மன விருப்பங்களோடு ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனாலும் உங்களது படைப்புகளில் நடைமுறைச்சாத்தியமற்ற வெறும் கவர்ச்சிகரமான வெற்றுக்கோசங்களுக்கு மட்டும் இடமளித்து விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசும் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள்.

நடைமுறைச்சாத்தியமற்ற கவர்ச்சிகரமான பேச்சுக்களும் உணர்ச்சிகரமான அறிக்கைகளும் அளவிற்கு மிஞ்சிய வன்முறைகளும்தான் இன்று எமது மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி அவலங்களை மட்டும் சந்திக்க வைத்திருக்கிறது.

அனுபவங்கள்தான் சிறந்த வழி காட்டி சிறந்த ஆசான். எமது கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எமது இலக்கு நோக்கி நகர்வதற்கு படைப்பிலக்கிய வாதிகளான நீங்களும் நடைமுறைசாத்தியமான வழிமுறையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

உங்களது கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிடினும் அந்தக் கருத்துக்களை கூறக்கூடிய உங்களது சுதந்திரத்திற்காக நான் உயிரை கொடுத்தும் போராடுவேன் என்று கூறி எனது உரையை நான் முடிக்கின்றேன்.

சுதந்திரமான படைப்பிலக்கியங்கள் எங்கும் வாழட்டும்.!
அவைகள் எமது மக்களை வழி நடத்திச் செல்லட்டும்!!


பிரியமுடன்
தோழர் டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி







Wednesday, September 30, 2009

யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம்!

யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் பதில் அதிபர் திரு.யோகராஜன் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு கோரி கல்லூரியின் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்திற்கு வந்து கல்லூரி அதிபரின் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததுடன் அதிபரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.








Monday, September 28, 2009

யாழ். உடுவில் மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்று பெற்றோர், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்.








Thursday, September 24, 2009

வலிகாமம் பகுதியில் கோப் சிட்டிகளை அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார்!

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நலத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாக "கோப் சிட்டி" பல இடங்களிலும் திறக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே, இதன் ஓர் கட்டமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் மற்றும் ஏழாலை பகுதிகளிற்கான கோப் சிட்டிகளை இன்று 24 ஆம் திகதி அமைச்சர் திறந்து வைத்தார்.