
இந் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபா அணி) செயலாளர் சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியத்தர் திரு சங்கையா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமான மௌலவி சுபியான் போன்றோர் ஒன்றாக ஒரே மேடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனவுக்கு மேடையில் ஆசனம் ஒதுக்கப்படாமையினால் பார்வையாளர்களில் ஒருவராக முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளிடம் பார்வையாளர்கள் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வினாக்கள் தொடுத்த போது அவ்வினாக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஒரே நேரத்தில் இணைந்து பதிலளித்தமை சிறப்பானதாக இருந்தது.
