www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, August 30, 2009

தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை


அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது, இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும் மற்றும் விசேட அதிதியாக அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை:

சமாதானத்தின் காவலன் ஜனநாயகத்தின் நாயகன் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே!
சமூகங்களுக்கிடையிலான உறவிற்கு கை கொடுத்து நிற்கும் எமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களே!
அவரது கட்சியின் உறுப்பினர்களே!
மத்திய மற்றும் மாகாண அமைச்சர்களே!
அரசியல் கட்சிகளின் தலைவர்களே!
மக்கள் பணியை சுமந்து நிற்கும் கட்சியின் தொண்டர்களே!

அனைவருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக எமது வணக்கங்கள். அஸ்ஸல்லாமு அலைக்கும்.

இஸ்லாம் என்பது ஒரு அரபிச்சொல்! அதன் தமிழ் அர்த்தம் அமைதியை அடைவதற்கான நெறி என்று சொல்லப்படுகின்றது.

எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் அடைவதற்காக எமது சகோதர மக்களாகிய இஸ்லாமிய மக்களை நீதி நெறியின் வழி நின்று இன்று வழி நடத்தி வந்திருப்பவர் எமது சகோதரர் அதாவுல்லா அவர்கள்.

கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற சமாதானத்திற்கான பயணத்தில் இறுதிவரை தோள் கொடுத்து வந்த சகோதரர் அதாவுல்லா அவர்கள் எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும் இந்த புனித இலட்சிய பயணத்தின் வெற்றிக்காக பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றார்.

நீங்கள் விரும்பும் புனித மெக்காவிற்கான பயணம் எந்தளவிற்கு புனிதமானதோ அதே அளவிற்கு சமாதானத்திற்கான பயணமும் புனிதமானது என்றே நான் கருதுகின்றேன்.

ஆகவேதான் எமது சகோதர மக்களாகிய உங்களது பிரதிநிதியாக யாழ்ப்பாணத்திற்கு வந்து நடந்து முடிந்த எமது யாழ். மாநகர தேர்தலின் வெற்றிக்காக சகோதரர் அதாவுல்லா அவர்களும் அர்ப்பண உணர்வுகளோடு உழைத்திருக்கின்றார்.


பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் அவரது கருத்துக்களை நான் அவதானித்திருக்கின்றேன். அவர் மேடைகளில் பேசும்போது அவரது பேச்சாற்றலை கண்டிருக்கின்றேன். ஓட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் நேசத்தை அவரது கருத்தில் கண்டிருக்கின்றேன். இன மத சமூக ஐக்கியத்திற்கான விருப்பங்களை அவரது நடைமுறையில் கண்டிருக்கின்றேன்.

யாழ். குடாநாட்டில் அவர் பேசிய கருத்துக்களை எமது மக்களே என்னிடம் பல தடவைகள் வியந்து பாராட்டியிருக்கின்றார்கள்.

எமது இலங்கைத்தீவில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களாலும் மரியாதைக்குரியவராக போற்றிப்புகழப்படுகின்ற ஒருவர் மக்களாகிய உங்களை வழி நடத்திச் செல்லுகின்ற ஒரு தலைவராக உங்களுக்குக் கிடைத்திருக்கின்றார். அதை நினைத்து நீங்கள் அவரை மகிழ்ந்து பாராட்ட வேண்டும்.

கடந்துபோன எமது தேசத்தின் வரலாறு இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றது. யுத்தத்தினால் எமது தேசம் சிதைக்கப்பட்டிருந்தது. யுத்தத்தில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் எமது தேசத்தை நாம் அனைவரும் ஒன்று திரண்டு மீட்டிருக்கின்றோம்.

யுத்தம் ஓய்ந்து விட்டது. இரத்தம் நின்று விட்டது. ஆனாலும் இனித்தான் எமக்கு முன்பாக பாரிய வரலாற்றுக் கடமைகள் யாவும் பாரிய சுமைகளாக எழுந்து நிற்கப்போகின்றன.

எமது இலங்கைத்தீவில் அனைத்து இன மத சமூக மக்களும் சரிநிகர் சமனாக வாழும் புதியதொரு சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையானது நடைமுறைச்சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு என்றுதான் நான் நம்புகின்றேன்.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்டிருக்கின்றது. அதுபோல் வடக்கிலும் ஒரு மாகாண சபை ஆட்சி என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதிலிருந்து தொடங்கி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சம உரிமையும் என்ற எமது இறுதி இலக்கு நோக்கி நாம் நகர வேண்டும். இத்தகைய சூழலில்தான் தேசிய காங்கிரஸ் கட்சியின் இந்த வருடாந்த மாநாடு இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

எமது எண்ணங்கள் யாவையும் எமது ஜனாதிபதி அவர்கள் ஈடேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கைதான் வாழ்க்கை. வுhழ்க்கைதான் நம்பிக்கை. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.

கொடுங்கள்! பெற்றுக்கொள்வீர்கள். இதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். மக்களாகிய நீங்கள் அதாவுல்லா போன்ற அரும்பெரும் தலைவர்களுக்கு உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது நிம்மதியான வாழ்வினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

அதுபோன்று எமது இனிய சகோதரர் அதாவுல்லா அவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவினை கொடுக்க வேண்டும். இதனால் அவர் மக்களாகிய உங்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொடுப்பார் என்றே நான் நம்புகின்றேன்.

கடந்த கால எதிர்ப்பு அரசியலால் யாரும் எதையும் சாதிக்க முடிந்திருக்கவில்லை. ஆதனால் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அனுபவங்களில் இருந்துதான் இணக்க அரசியல் நிலைப்பாட்டை நாம் எமது விருப்பங்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

புலிகளின் தலைமையின் பிரச்சினை வேறு. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு. இரண்டையும் பிரித்துப்பார்த்து தனது கடமைகளை ஆற்றும் ஜனாதிபதி ஒருவரை நாம் பெற்றிருக்கின்றோம்.

புலித்தலைமையின் பிரச்சினைகள் அவர்கள் விரும்பியது போலவே முடிந்து விட்டது. ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். அதற்கு ஆதரவாகவும் உந்து சக்தியாகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்.

இன மத சமூக முரண்பாடுகளை களைந்து அனைத்து இன மத சமூக மக்களுக்குமான உறவுப்பாலமாக அனைத்து தலைவர்களும் தொடர்ந்தும் உழைப்பதற்கு முன்வர வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

ஏமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களின் உறுதியான தலைமையினை ஏற்று மக்களாகிய நீங்கள் நிரந்தரமான மகிழ்ச்சிக்காகவும் நிரந்தரமான அமைதிக்காகவும் எமது தேசத்தின் உயர்ச்சிக்காகவும் அணி திரண்டு நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த வருடாந்த மாநாட்டை வாழ்த்தி வணங்கி உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்.

அஸ்ஸல்லாமு அலைக்கும்.

நன்றி