www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, June 1, 2011

அவதூறு பரப்புவதை விடுத்து நாகரீகமான அரசியல் பணி செய்யுங்கள் - ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மேயர் - வீடியோ இணைப்பு

அர்த்தமற்ற வகையில் எம் மீதான அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கைவிட்டு நேர்மையானதும் நீதியானதுமான நாகரீக அரசியல் வழி முறை நோக்கி வருவதற்கு மாநகர சபையின் எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு துணை போவோரும் முன்வர வேண்டும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையின் நல்லாட்சி மீதும் எமது கட்சி சார்ந்த மாநகரசபை உறுப்பினர்கள் மீதும் அண்மைக்காலமாக உண்மைக்கு புறம்பான அபாண்டமான பழிகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகள் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.

யாழ் மாநகர சபைக்கும் வவுனியா நகரசபைக்கும் ஏக காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் யாழ் மாநகரசபை நிர்வாகத்தை எமது மக்களின் ஆணையை பெற்று அதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தோம். இதே வேளை வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்று அதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தனர்.

ஆனாலும் எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலில் யாழ் மாநகரசபையை பெறுப்பேற்றிருக்கும் நாம் எமது மாநகர மக்களுக்கான சேவைகளை அபிருத்தி பணிகளை சிறப்பாகவும் நேர்மையாகவும் நடத்தி வருகின்றோம்.

ஆனாலும் வவுனியா நகரசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதையும் ஆற்ற முடியாத கையாலாகதவர்களாக சேர்ந்து கிடக்கின்றனர். அவர்களின் வவுனியா நகரசபை செயற்பாடுகள் இன்றி தூங்கி கிடப்பது கண்டு வவுனியா நகரசபை வாழ் மக்களை போலவே நாமும் கவலை அடைகின்றோம்.

தமது ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா நகரசபை நிர்வாகத்தை சீராக வழிநடத்தி மக்களுக்கு சேவையாற்ற முடியாதவர்கள் சீராகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வரும் யாழ் மாநகரசபையின் நல்லாட்சியை கண்டு காழ்ப்புணர்சியில் வெறும் கட்டுக்தைகளை கட்டிவிட்டு எமது மக்களுக்கான சேவைகளை தடுத்து நிறுத்தவும் களங்கப்படுத்தவும் எத்தனித்து வருகின்றார்கள்.

நான் ஒரு ஆசிரியை. எமது மாணவச் செல்வங்களுக்கு கல்வியை மட்டுமன்றி மனிதநேயப்பண்புகளையும் எமது கலாச்சார விழுமியங்களையும் போதித்து வந்திருக்கின்றேன். இதேவேளை மக்களுக்கு சேவையாற்ற விரும்பிய நான் யார் நல்லதை செய்கிறார்களோ அவர்களோடு இணைந்து செயலாற்ற விரும்பி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொள்கை கோட்பாடுகளை உணர்ந்து அவரது ஓயாத மக்கள் பணியை கருத்தில் கொண்டு அவரோடு இணைந்துதான் எமது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று கருதி யாழ் மாநகரசபையின் தேர்தலில் போட்டியிட்டு மாநகர சபை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

ஆனாலும் எமது மக்கள் சேவைகளை கண்டு சகிக்க முடியாதவர்கள் சிறப்பான எமது நிர்வாகத்தை கண்டு காழ்ப்புணர்ச்சியில் கலங்கி நிற்பவர்கள் யாழ் மாநகரசபை ஊழல் செய்கின்றது என உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

அத்தோடு கொடிய வன்முறைகளை எதிர்க்கும் என் மீதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ந்த எமது மாநகரசபை உறுப்பினர்கள் மீதும் பழிகளை சுமத்தும் படியாக தம்மீதான அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் எம் மீது அபாண்டமான பழிகளை சுமத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக எமது யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் விடயமானது உண்மையற்ற வெறும் போலியான கட்டுக்தை என்பதை நான் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இதேவேளை யாழ் மாநகரசபையின் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் என்ற பொறுப்புணர்ச்சியோடு இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்தனவா என்ற உண்மைத்தன்மைகளை நாம் ஆராய்ந்து பார்த்த போது சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்ட சூழலில் உள்ள பொதுமக்களோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு எந்தவொரு சம்பவங்களும் நடந்திருக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

ஆகவே இவைகள் எம்மீது பழிசுமத்துவதற்காக நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சோடிப்பு கதைகள் என்றே தெரியவந்துள்ளது. நடக்காதவைகளை நடந்தவைகள் என்று வெறும் கற்பனை கதைகளை கட்டி விட்டு எமது மக்கள் சேவைக்கு எதிராக குழப்பங்களை உருவாக்கும் ஆநாகரீக அரசியல் இதுவாகும்.

இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்திருப்பினும் அவைகளை நாம் ஒரு போதும் அங்கீகரிக்கப்போவதில்லை. நடந்திருக்காத சம்பவங்களோடு எம்மை தொடர்பு படுத்தி எமது மக்கள் சேவையை களங்கப்படுத்தும் கபடத்தனமான அவதூறுப் பிரச்சாரங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யேகேஸ்வரி பற்குணராசா அவர்கள் எமது நல்லாட்சியை களங்கப்படுத்துவதன் மூலம் குறுக்கு வழியில் சுயலாப அரசியல் ஆதாயம் தேடுவதை கைவிட்டு நேர்மையோடு மக்களுக்காக உழைக்கும் நாகரீகமான அரசியல் வழிமுறை நோக்கி சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்றும்; தெரிவித்துள்ளார்.

நன்றி: ஈபிடிபி நியூஸ்