www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, April 8, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பகிரங்க அழைப்பு! - டக்ளஸ் தேவானந்தா

புலிகள் இயக்க உறுப்பினர்களே! நீங்கள் மக்களின் பக்கமா? அல்லது உங்கள் தலைமையின் பக்கமா?... சுயமாகச் சிந்தித்து தீர்மானம் எடுங்கள்!

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஓர் பகிரங்க அழைப்பு!

தூக்கிய துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும் விடுதலையை ஒரு போதும் பெற்றுத் தராது! நான் சொல்லும் அறிவாயுதத்தையும் உங்கள் கருத்தில் எடுத்து ஒரு கணம் நீங்கள் சித்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நீங்கள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்களை நான் புலிகள் என்று ஒரு போதும் கருதவில்லை. எமது தேசத்தின் புதல்வர்களாகவே நாம் உங்களை பார்க்கின்றோம். நாம் நேசிக்கும் எமது மக்களின் பிள்ளைகளாகவே நாம் உங்களை கருதுகின்றோம்.

உங்களில் பலர் புலித் தலைமையினால் பாலாத்காரமாக ஆயுதப் பயிற்சிக்கு பிடித்து செல்லப்பட்டவர்கள். புலித் தலைமையின் தவறான பரப்புரைகளை நம்பி நீங்களாகவே விரும்பியும் உங்களில் சிலர் புலித் தலைமையோடு இன்னமும் இணைந்திருக்கிறீர்கள். இதை நான் புரிந்து கொள்கின்றேன்.

உங்களில் பெருந்தொகையானவர்கள் அமைதியை விரும்புகின்றீர்கள், சமாதானத்தை விரும்புகின்றீர்கள், அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றீர்கள்.
ஆனாலும் உங்களில் சிலர் இன்னமும் புலித் தலைமையின் அழிவு யுத்தத்திற்கும் வன்முறைக்கும் தொடர்ந்தும் பலியாகி வருவது கண்டு நான் மனத் துயரம் அடைகின்றேன்.
முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்திற்கு நீங்கள் மட்டும் பலியாகவில்லை. புலித் தலைமையின் அழிவு யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அவலங்களையும், அழிவுகளையும் சந்தித்து வருகின்றார்கள்.

யாருக்காக நீங்கள் யுத்தம் நடத்துவதற்கு புலித் தலைமையால் தூண்டி விடப்பட்டீர்களோ அதே மக்கள் இந்த அழிவு யுத்தத்தினால் பேரவலங்களைச் சந்தித்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எமது மக்கள் இன்று சொந்த வீடிழந்து, சொந்த நிலமிழந்து, சொந்தங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதற்கு புலித்தலைமையே பிரதான பொறுப்பு என்பதை நீங்கள் உணராமல் இருந்துவிட முடியாது.

அதற்காக சாதாரண புலி உறுப்பினர்களாகிய உங்களை நான் தவறு என்று கூற விரும்பவில்லை. உங்களை அழிவு யுத்தம் நடத்துவதற்கு தூண்டி விட்டுக்கொண்டிருக்கும் புலித் தலைமையே இன்று வரை எமது மக்களுக்கு மாபெரும் வரலாற்று துரோகங்களை இழைத்து வருகின்றது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலி உறுப்பினர்களாகிய உங்கள் மீது குற்றம் சுமத்தியது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். புலித்தலைமையே எமது மக்களுக்கு துயரங்களை சுமத்தி வருகின்றது என்றுதான் நான் எப்பொழுதும் கூறி வருகின்றேன்.

புலிகளின் பிரச்சினை வேறு! தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு! அது போலவே புலித்தலைமையின் பிரச்சினை வேறு! புலி உறுப்பினர்களாகிய உங்களின் பிரச்சினை வேறு என்றுதான் நான் இன்னமும் கருதி வருகின்றேன்.

நீங்கள் இள வயதானவர்கள், தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்ட வரலாறு உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சமாதானத்தையும், அமைதியையும், அரசியல் தீர்வையும் விரும்பும் எங்களை எமது மக்களின் உரிமைக்கு எதிரானவர்கள் என்றே புலித் தலைமை உங்களுக்கு பரப்புரை செய்து வருகின்றது.

ஆனாலும் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ஆயுதப்போராட்டம் என்பதை நான் முழுமையாக நிராகாரிப்பவன் அல்ல. நாங்களும் அன்று ஆயுதம் ஏந்தி எமது மக்களின் உரிமைக்காக போராடியிருந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனியியக்க கொள்கையினால் தடம் புரண்டு திசை மாறிப்போயிருந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

புலித் தலைவர் பிரபாகரன் தான் மட்டும் தலைவர் என்று கருதி எமது விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து தமிழ் தலைவர்களையும் கொன்றொழித்த கொடுமைகளை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடு பட்டிருந்த தலைவர்கள் முதற்கொண்டு, ஐனநாயக வழியில் போராடிக்கொண்டிருந்த அனைத்து தமிழ் தலைவர்களையும் புலித்தலைவர் பிரபாகரனே கொன்றொழித்து வந்திருக்கின்றார்.

இது வரை கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் தலைவர்களையும் புலித் தலைமையே கொன்றொழித்திருக்கின்றது. எந்தவொரு தமிழ் தலைவர்களையும் அரச படையினர் கொன்றொழித்த வரலாறு கிடையாது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்களை மட்டுமன்றி, அயிரக்கணக்கான சக இயக்க போராளிகளை மட்டுமன்றி, தம்மோடு முரண்பட்டு நின்று ஏன் என்று கேள்வி எழுப்பிய உங்களது சொந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரையும் புலித் தலைமையே இறுதிவரைக்கும் கொன்றொழித்து வந்திருக்கின்றது.

இவ்வாறு சொந்த இனத்தையே கருவறுத்து வருகின்ற புலித் தலைமை தமிழ் பேசும் மக்களுக்காகவே தாம் யுத்தம் நடத்துவதாக கூறி வருவதை நீங்கள் நம்புகின்றீர்களா என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.

தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்போராட்டம் என்பது தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் வன்முறைக்களமாக எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்த போதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு எமக்கு ஏற்பட்டிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் வரைக்கும் உங்களது புலித்தலைமை 652 உறுப்பினர்களை மட்டுமே யுத்த களத்தில் பலிகொடுத்திருந்தது, ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தவறிய உங்களது புலித்தலைமை இந்திய அமைதிப்படையோடு யுத்தத்தை தொடங்கியிருந்தது.

இதனால் யுத்த களத்தில் பலி கொடுக்கப்பட்ட உங்களைப்போன்ற புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2008 நவம்பர் வரைக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து சென்றிருக்கின்றது, இந்த தொகை இன்று இன்னும் பல ஆயிரங்களை தொட்டு நிற்கின்றது.

புலித் தலைமையின் அடங்காத யுத்த வெறியினால் இதுவரை பலிகொடுக்கப்பட்ட உங்களது சக உறுப்பினர்களை நான் புலிகளாக ஒரு போதும் கருதியதில்லை. அவர்கள் அனைவருமே எமது தேசத்தின் புதல்வர்கள். அவர்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதை புலித் தலைமை நடை முறைப்படுத்தியிருந்தால் பலிகொடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 652 ஆகவே இருந்திருக்கும். கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமானவர்கள் உங்களது புலித் தலைமையே தான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பிரேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கிரமசிங்க - புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தொடர்ந்து இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் - புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களும் கனிந்து வந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிடைத்த சந்தர்ப்பங்களை உங்களது புலித்தலைமை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது தான் எனது ஆதங்கம், அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் இன்று உங்களது உறவுகளான எமது மக்கள் பேரவலங்களைச் சந்திக்க வேண்டிய துயரம் நடந்திருக்காது. உங்களோடு கூட இருந்த உங்களது சக உறுப்பினர்களை நீங்கள் பறி கொடுத்திருக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்திருக்காது.

இழந்த நிலங்களை தாம் மறுபடியும் மீட்போம் என்று புலித் தலைமை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வந்திருக்கிறது, யாரை நம்பி புலித் தலைமை இந்த வாக்குறுதிகளை எமது மக்களுக்கு கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கைவிட்டு ஓடிய நிலங்களை மறுபடியும் மீட்பதற்கு புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களையே புலித் தலைமை களத்தில் இறக்கி பலிகொடுத்து வருகின்றது. ஆனால் புலித் தலைவர்களும் சரி, அவர்களுக்கு சுயலாப நோக்கில் ஆதரவளிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சரி தங்களது பிள்ளைகயை யுத்த களத்திற்கு அனுப்பியிருந்தார்களா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மட்டும் பொத்தி வளர்த்துக் கொண்டு, வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்து விட்டு ஊரார் விட்டுப் பிள்ளைகளான உங்களை மட்டும் யுத்த களத்திற்கு அனுப்பி புலித்தலைமை பலி கொடுத்து வருகின்றது.

இது போலவே புலிகளின் தயவில் சுயலாப அரசியல் நடத்தி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தங்களது பிள்ளகளை மட்டும் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு எமது தாயக தேசமெங்கும் யுத்த சூழலை தூண்டிவிட்டு அப்பாவி மக்களான அடுத்தவன் பிள்ளைகளை மட்டும் யுத்த களத்திற்கு பலி கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் கண்ட மிச்சம் என்ன என்பதை நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள். அழிவுகளும், அவலங்களும் மட்டும் தான் எமக்கு மிஞ்சியிருக்கின்றன. எமது சொந்த மக்களை பலி கொடுக்கும் துயரங்களே இங்கு மிஞ்சியிருக்கின்றன. கொன்று பலியாக்கப்பட்ட எமது தேசத்தின் இளைஞர் யுவதிகளின் சமாதிகளே இங்கு எஞ்சியிருக்கின்றன.

போராட்டம் என்பது நாங்களும் போராடினோம் என்ற வீராவேசத்தை விளம்பரப்படுத்துவதற்காகவோ அன்றி, சுயலாப நோக்கங்களுக்காகவே அல்ல. அடைய வேண்டிய உரிமைகளை அடைவதற்காகவே போராட்டம் நடத்தப்பட வேண்டும். இது வரை புலித் தலைமை பெற்றுத் தருவதாக கூறிய விடுதலையை உங்களுக்கு பெற்றுத் தந்தார்களா என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

இழந்தவற்றை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த புலித் தலைமை இருந்ததையும் இழந்து போய் எமது தமிழ் சமூகத்தையே நடுத் தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இருந்த நிலங்களையும் இழந்து, வளங்களையும் இழந்து, பலங்களையும் இழந்து, எமது சமூகத்தின் பெருமைகளையே அழித்து சிதைத்திருக்கின்றது புலித் தலைமை.

இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் அடுத்தவர்கள் தான் காரணம் என்று புலித் தலைமை பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து வருகின்றது. உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் யாரோ தூவி விட்டவைகள் அல்ல, அது என்றோ ஒரு நாள் உனக்கு நீயே தூவி விட்டவைகள். இவ்வாறு தமிழில் ஒரு அறிவுரை உள்ளதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது போலவே புலித் தலைமை இன்று இருந்த நிலங்களையும் கைவிட்டு ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் புலித் தலைமை தாமாகவே தமது வரலாறெங்கும் விட்ட தவறுகள் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பண்டைக் காலத்தில் யுத்தம் புரியும் அரசர்கள் தமக்கு எதிராக வரும் வாள் வீச்சுக்களையும், வேல் வீச்சுக்களையும் தாம் வைத்திருக்கும் கேடயங்களால் தடுத்து நிறுத்துவார்கள், ஆனால் புலித் தலைமை இன்று தம்மை நோக்கி நடத்தப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அப்பாவி மக்களின் உயிர்களையே கேடயமாக பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே தான் இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எமது மக்களான உங்களது உறவுகளை புலித் தலைமை சுதந்திரமாக வெளியேற விடாமல் அவர்களை தம்மை பாதுகாப்பதற்கான மனித கேடயங்களாக தடுத்து வைத்திருக்கின்றது.

மக்களை காப்போம், மண்ணை மீட்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த புலித் தலைமை தங்களது அடங்காத யுத்த வெறிக்காக சாதாரண உறுப்பினர்களாகிய உங்களையே களப் பலி கொடுத்து வருகின்றது.

அமைதிப் பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அரசியல் தீர்வையே புலித் தலைமை பெற்றிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக யுத்தத்தின் மூலம் தாம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொடுத்திருந்த புலித் தலைமையினால் எந்த இலக்கையும் அடைய முடியாமல் அழிவுகளை மட்டும் எமது மக்களுக்கு உருவாக்க முடிந்திருக்கிறது.

இது எம்மிடையே தீராத மனத்துயங்களை உருவாக்கியிருக்கின்றது, நான் இன்னொரு அரசியல் சார்ந்தவன் என்பதற்காக புலித் தலைமையை பிழை என்று கூற வரவில்லை, போட்டி அரசியலுக்காக இந்த கருத்துக்களை நான் கூற வரவில்லை, அவலப்படுகின்ற எமது மக்களின் நலன்களில் இருந்தும், அநியாயமாக பலி கொள்ளப்படுகின்ற புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களது நலன்களில் இருந்தும்தான் நான் இந்த கருத்துக்களை கூறுகின்றேன்.

என் அன்புக்கும் நேசத்திற்கும் உரிய இளையோர்களே!உங்கள் விருப்பங்களுக்குமாறாக நீங்கள் பாலாத்காரமாக புலிகள் அமைப்போடு இணைக்கப்பட்டிருக்கலாம், இன்னும் உங்களில் சிலர் நீங்களாகவே புலிகள் இயக்கத்தின் சுயலாப அரசியலைச் சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களோடு விரும்பியும் இணைந்திருக்கலாம், இதை என்னால் உணர முடிகின்றது.

உங்களது தியாகங்களை நாம் ஒரு போதும் கொச்சைப்படுத்த விரும்பியவர்களல்ல, உங்களது அர்ப்பண உணர்வுகளை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் புரிகின்ற தியாகங்கள் எமது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன். ஆனால் இருந்த உரிமைகளையும் பறி கொடுப்பதற்காகவே புலித் தலைமை உங்களை பலி கொடுத்து வருவதுடன், வெறும் அழிவுகளுக்காகவே புலி உறுப்பினர்களாகிய உங்களது தியாகங்களையும் பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டும்தான், உங்களை தற்கொலை குண்டு தாரிகளாக புலித் தலைமை என் மீது ஏவி விட்டிருந்தாலும், உங்களது கைகளில் கொலைக் கருவிளைத் திணித்து எங்கள் தோழர்களை உங்கள் தலைமை கொன்றொழிக்குமாறு உங்களை தூண்டி விட்டிருந்தாலும், எமது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உங்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன், எமது தேசத்தின் புதல்வர்களாகவே கருதுகின்றேன். எமது மக்களின் பிள்ளைகளாகவே நான் உங்களை கருதுகின்றேன்.

நீங்கள் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வை விரும்புபவர்களாக இருந்தால், உங்களது உறவுகள் ஒரு சமாதான தேசத்தில் வாழ வேண்டும் என நீங்கள் விரும்பினால், வெறும் அழிவுகளை மட்டும் தந்து கொண்டிருக்கும் உங்கள் ஆயுதங்களை கையளித்து அமைதி வழிக்கு திரும்மாறு நேசக்கரம் நீட்டி உங்களை அழைக்கின்றேன்.

சமாதான தேசத்தையே நாம் விரும்புகின்றோம், அமைதியையும், அரசியலுரிமையுடன் கூடிய சுதந்திரத்தையும் நாம் விரும்புகின்றோம். எமது மக்களுக்கு உயிர் வாழும் உரிமை வேண்டும்.

சுதந்திரமாக எமது மக்கள் எமது தேசமெங்கும் நடமாட வேண்டும், சுதந்திரமாக எதையும் பேச வேண்டும், சுதந்திரமாக எமது மக்கள் தொழில் புரிய வேண்டும்.


பிரியமுடன்

தோழர் டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)